Chennai MTC: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 520 புதிய ஏசி மினி பஸ்கள் -எம்.டி.சி-யின் மெகா பிளான்
Chennai MTC 520 புதிய தாழ்தள ஏசி பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்குவதற்கான டெண்டரை மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) வெளியிட்டுள்ளது.

சென்னையின் பொதுப்போக்குவரத்து கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், 520 புதிய தாழ்தள ஏசி பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்குவதற்கான டெண்டரை மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) வெளியிட்டுள்ளது.
இதில் 'Gross Cost Contract' முறையில் 300 ஃபீடர் (Feeder) பேருந்துகளும், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 220 மின்சார பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
குறுகிய சாலைகளிலும் இனி ஏசி பயணம்!
குடியிருப்புப் பகுதிகள் மற்றும் உட்புற சாலைகளை பிரதான பேருந்து நிலையங்கள், சென்னை எம்.ஆர்.டி.எஸ் (MRTS) மற்றும் புறநகர் ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் 300 புதிய ஏழு மீட்டர் நீளமுள்ள தாழ்தள ஏசி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
சிறப்பம்சங்கள்:
-
வசதி: முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறும் வகையில் தாழ்தள வடிவமைப்பு.
-
நெரிசல் மேலாண்மை: குறுகிய மற்றும் நெரிசலான தெருக்களில் எளிதாகத் திரும்பும் திறன்.
-
செயல்பாடு: நடத்துனர் இல்லாத (Conductor-less) சேவை.
-
இடைவெளி: ஒவ்வொரு 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படும்.
பழைய மினி பஸ்களுக்கு விடை
இது குறித்து MTC மேலாண் இயக்குநர் டி. பிரபுசங்கர் கூறுகையில், "முதல் கட்டமாக பழைய சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இச்சேவை தொடங்கப்படும். ஏற்கனவே 220 மினி பஸ்கள் மூலம் 85 வழித்தடங்களில் சேவை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 146 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அவையும் 11 முதல் 12 ஆண்டுகள் பழமையானவை" எனத் தெரிவித்தார்.
தற்போது CUMTA அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், தற்போதுள்ள 85 வழித்தடங்களுடன் கூடுதலாக 151 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் பயணிகளுக்காக 220 மின்சார பேருந்துகள்
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பயணிகள் எளிதில் வந்து செல்லும் வகையில், 220 மின்சார தாழ்தள ஏசி பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
-
7 மீட்டர் நீளம்: 70 மின்சார பேருந்துகள்.
-
5 மீட்டர் நீளம்: 150 மின்சார பேருந்துகள்.
இவை வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளை மெட்ரோ நிலையங்களுடன் இணைக்கும். சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் இவை மின்சார வாகனங்களாக (EV) வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஐந்து நிமிட நடைப்பயணமே இலக்கு!
"சென்னையில் எந்த ஒரு குடிமகனும் பொதுப்போக்குவரத்தை அடைய 5 நிமிடங்களுக்கு மேல் நடக்கக் கூடாது என்பதே எங்களது இறுதி இலக்கு" என்று பிரபுசங்கர் உறுதியளித்தார்.
இந்த புதிய முன்னெடுப்பு தனியார் வாகனங்களின் தேவையைக் குறைத்து, நகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























