![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
New Parliament Building: 'புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும்' உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ..!
புதிய நாடாளுமன்ற கட்டிடம் குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
![New Parliament Building: 'புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும்' உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ..! New Parliament Building Opening Public Interest Litigation Case Filed in Supreme Court New Parliament Building: 'புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும்' உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/25/fc3e3913fbd70f83db5fb6b3d9d989511685013215351333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் வரும் 28-ந் தேதி திறந்து வைக்க உள்ளார். குடியரசுத் தலைவர்தான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம், நாட்டின் குடியரசுத் தலைவரால் திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டு உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம்:
டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக, சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்த நிலையில், 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், நாடாளுமன்ற புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந் தேதி திறக்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. மக்களவை செயலகமும் இதனை உறுதிப்படுத்தியது. இதன்படி, இந்த நிகழ்ச்சி வருகிற 28-ந்தேதி மதியம் 12 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்பட வேண்டும், பிரதமரால் அல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை பொது செயலாளர் உத்பல் குமார் சிங், இந்த அழைப்பிதழை எம்.பி.க்கள் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பிரதமர் மோடி தலைமையிலான அரசை சாடினார். இதேபோன்று, ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் மனோஜ் குமார் ஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி. ராஜா, உள்ளிட்டோரும் மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்களை தெரிவித்தனர்.
மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், குடிரசுத் தலைவர் நாட்டின் தலைவராக இருக்கிறார். அரசின் தலைவராக பிரதமர் இருக்கிறார். அரசு சார்பாக நாடாளுமன்ற நிகழ்வை வழிநடத்துகிறார். குடியரசுத் தலைவர் இரு அவையிலும் உறுப்பினராக இல்லை. ஆனால், பிரதமர் உறுப்பினராக இருக்கிறார் என தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்கும் முடிவில் உள்ளன. இந்த முடிவை திரும்ப பெறும்படி மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேட்டு கொண்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)