FIFA World Cup 2026: பாகிஸ்தானுக்கு தடை! கால்பந்து உலக கோப்பையில் இந்த நாடுகள் பங்கேற்காது.. ஏன் தெரியுமா?
கால்பந்து உலக கோப்பைக்கு இன்னும் 14 மாதங்களே உள்ள நிலையில், மூன்று நாடுகளுக்கு FIFA தடை விதித்துள்ளது. வெவ்வேறு காரணங்களுக்காக பாகிஸ்தான், ரஷியா, காங்கோ ஆகிய நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2026 கால்பந்து உலக கோப்பையில் பங்கேற்க மூன்று நாடுகளுக்கு சர்வதேச கால்பந்து சங்கக் கூட்டமைப்பு (FIFA) தடை விதித்துள்ளது. பாகிஸ்தான், ரஷியா, காங்கோ ஆகிய நாடுகளை வெவ்வேறு காரணங்களுக்காக FIFA தடை செய்துள்ளது. பாகிஸ்தானை பொறுத்தவரையில், பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு, FIFA விதிகளை பின்பற்றாத காரணத்தால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
2026 கால்பந்து உலக கோப்பை:
FIFA வரலாற்றில் முதல்முறையாக 2026 கால்பந்து உலக கோப்பையில் 48 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. அடுத்தாண்டு, ஜூன் மாதம் 11 ஆம் தேதி தொடங்கும் கால்பந்து உலக கோப்பை ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்முறையாக கால்பந்து உலக கோப்பை 3 நாடுகளில் நடைபெற உள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. ஆனால், பெரும்பாலான போட்டிகள் அமெரிக்காவில்தான் நடக்க இருக்கின்றன.
கால்பந்து உலக கோப்பைக்கு இன்னும் 14 மாதங்களே உள்ள நிலையில், மூன்று நாடுகளுக்கு சர்வதேச கால்பந்து சங்கக் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. வெவ்வேறு காரணங்களுக்காக பாகிஸ்தான், ரஷியா, காங்கோ ஆகிய நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்:
போட்டியில் இருந்து தடை செய்யப்பட்ட மூன்று நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு (PFF) சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்பை அமல்படுத்தவில்லை. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்துவது என்பது FIFA மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) விதிகளின்படி கட்டாயமாகும்.
சங்க தேர்தல் நடத்தாத காரணத்தால் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி, பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை FIFA இடைநீக்கம் செய்தது. கடந்த 2019ஆம் ஆண்டு, ஜூன் மாதம் முதல் FIFA நியமித்த குழுவால் பாகிஸ்தான் கால்பந்து நிர்வகிக்கப்படுகிறது.
ரஷியா:
கடந்த 2022 ஆம் ஆண்டு, உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து, ரஷிய கால்பந்து அணி FIFA மற்றும் UEFA போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2026 கால்பந்து உலகக் கோப்பையிலும் பங்கேற்க முடியாது.
காங்கோ:
காங்கோ கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தில் சட்டவிரோதமான மூன்றாம் தரப்பு தலையீட்டின் காரணமாக காங்கோ நாடு FIFA போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: IPL 2025 Rules: அதெல்லாம் முடியவே முடியாது..! ஐபிஎல், வீரர்களுக்கு பிசிசிஐ விடுத்த கடும் கட்டுப்பாடுகள்


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

