பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்க ராமதாஸ் வலியுறுத்தல் - தண்ணீர் பிரச்னை தீருமா?

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு மாதம் கடந்தும் தென் பெண்ணையாறு மத்திய அரசு தீர்ப்பாயத்தை அமைக்கவில்லை. உடனே தீர்ப்பாயத்தை அமைக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’வட தமிழ்நாட்டில் “வெண்ணை உருகும் முன் பெண்ணை உருகும்” என்ற சொலவடை உண்டு. வெண்ணை உருகும் கால அவகாசத்திற்குள் பெண்ணையாற்றின் மணல் உருகும் அளவிற்கு வெகு வேகமாக தண்ணீர் வரத்து இருக்கும் என பொருள்படும்படி கூறினார்கள்.
நீர்ப்பிடிப்பு பகுதிகள்
கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை 391 கிமீ தூரம் கடந்து கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கிமீ ஆகும்.
இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி சாலை, நாச்சிக்குப்பத்தில் இருந்து 8 கி.மீ., துாரத்தில், கர்நாடக வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதி யார்கோள். இங்கு கட்டப்பட்டுள்ள யார்கோள் அணையின் நீளம் 1,410 அடி, உயரம் 164 அடி. நதிநீர் பங்கீடு விதிகளுக்கு முரணாக கட்டப்பட்ட இந்த அணை மீது தமிழக அரசு சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் என்ற எண்ணத்தில், மதகுகள் இன்றி 164 அடி உயரத்திற்கு நீர் தேக்கும் வகையில், பெரிய தடுப்பணையாக கட்டப்பட்டுள்ளது.
குறைந்த நீர்வரத்து
அணையின் மொத்த கொள்ளளவு 50 கோடி கன அடி. அதாவது அரை டி.எம்.சி., இந்த அணையின் மொத்த கொள்ளளவும் எட்டப்பட்டால் மட்டுமே, தண்ணீர் தென்பெண்ணையாற்றுக்கு வரும். முன்னதாக கோலார் மாவட்டத்தில் உள்ள பெத்தமங்கலம், ராம்சாகர் உள்ளிட்ட இடங்களில், கர்நாடக அரசு ஏற்கனவே தடுப்பணைகளை கட்டியதால், மார்க்கண்டேய நதிக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது.
இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள யார்கோள் அணை நிரம்புவதற்கே சாத்தியமில்லாத சூழலில், தமிழகத்திற்கு மார்கண்டேய நதி நீர் வர வாய்ப்பில்லை. யார்கோள் அணையை கட்ட 2006-ல் முடிவு செய்த கர்நாடக அரசு, 2007-ல் அனுமதி வழங்கியது. 2009-ல் அனைத்து துறை அனுமதியுடன் அணை கட்டும் பணி துவங்க இருந்த நிலையில், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கொரோனா சமயத்தில்...
கொரோனா ஊரடங்கு சமயத்தைப் பயன்படுத்தி, சத்தமில்லாமல் அணையின் 90 சதவீத பணிகளை, கர்நாடக அரசு முடித்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு 2018-ல் வழக்கு தொடர்ந்தது.அதில், ‘1892 மற்றும் 1933-ல் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள்படி, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் பெண்ணையாறு நதியின் குறுக்கே அணை அல்லது தடுப்பணை கட்ட கர்நாடகாவுக்கு உரிமை இல்லை.
அணை, தடுப்பணை கட்டினால், தமிழகத்துக்கான நீர் வரத்து குறைந்து விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். இதில் தீர்வு ஏற்படுத்துவதில் மத்திய அரசு தரப்பில் திட்டவட்ட நடவடிக்கை தேவைப்படுகிறது என்று வலியுறுத்தப்பட்டது.
முன்னர் நடந்த விசாரணைகளின்போது, கர்நாடகா தரப்பில், ‘குடிநீர் தேவைக்காகவே அணை, தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இது, பழைய ஒப்பந்தங்களை மீறும் நடவடிக்கை அல்ல' என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில், 'மத்திய அரசு பிரதிநிதி முன்னிலையில், இரு மாநிலங்களின் அமைச்சர்கள் மூலம் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டது. நேரடி பேச்சு வார்த்தை முயற்சிகளில் எந்த பலனும் இல்லாததால், தீர்ப்பாயம் அமைக்க தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இது தொடர்பான விசாரணை 2023-ல் நடந்த போது, மத்திய அரசு தரப்பில், 'பெண்ணையாறு நதிநீர் பங்கீடு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின், தீர்ப்பாயம் அமைக்கப்படும்' என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதுபற்றி சில விசாரணைகளை நடத்தி சில ஆலோசனைகளை வழங்கிய உச்சநீதிமன்றம் 2025 டிசம்பரில் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில், நீதிபதிகள் விக்ரம்நாத், என்.வி.அன்ஜாரியா கொண்ட பெஞ்ச், கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி ‘தமிழகம், கர்நாடகா இடையிலான பெண்ணையாறு நதிநீர் பங்கீடு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதற்கான தீர்ப்பாயத்தை, மத்திய அரசு ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும்' என்று தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒருமாதத்தை கடந்தும் இன்னமும் மத்திய அரசு தீர்ப்பாயத்தை அமைக்காமல் இருப்பது தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருப்பதாகவே பார்க்க முடிகிறது. எனவே உடனே மத்திய அரசு தீர்ப்பாயத்தை அமைக்கவேண்டும்’’ என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
























