Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து போர் நடத்தி வரும் நிலையில், போரில் அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் வருத்தமளிப்பதாகவும், குறைந்தபட்சம் மனிதநேயம் இப்போரில் வெல்ல வேண்டும் என்றும் திரைத்துறையிலிருந்து முதல் ஆளாக மம்மூட்டி குரல் கொடுத்திருக்கிறார்.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் பிப்ரவரி 28-ம் தேதி முதல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.
குறிப்பாகத் தெற்கு ஈரானில் மகளிர் பள்ளி மீது ஏவுகணை விழுந்ததில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தக் கொடூர தாக்குதலுக்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக மத்திய கிழக்கில் UAE, சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளையில், தாக்குதலை நிறுத்தாவிட்டால் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானை எச்சரித்து வருகிறது.
இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, போரில் அப்பாவி மக்கள் உயிர் பறிபோவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
கேரளாவில் பிரபல இயக்குநர் டி.வி. சந்திரனின் 50 ஆண்டுகால சினிமா கரியரை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய மம்மூட்டி, ``சினிமாவிலும் விவாதங்கள், வாக்குவாதங்கள் ஏன் சண்டை கூட நடந்திருக்கின்றன.
சிலசமயம் சிலர் அதில் வெல்வார்கள். சில சமயம் இருதரப்பினருமே தோற்பார்கள்.
இப்போது கூட வெளியே ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. போர் எதற்கும் தீர்வாகாது. அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவது வருத்தமளிக்கிறது.
இந்தப் போரில் யார் வெற்றிபெறுவார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், மனிதநேயம் வெற்றிபெற வேண்டும் என்பதே என் விருப்பம்.
இதில் மனிதர்கள் வெல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் மனிதநேயம் வெல்லட்டும்" என்று கூறியிருக்கிறார்.























