Samayapuram : மாரியம்மா எங்களை காப்பாற்று... சமயபுரம் வரும் பக்தர்களின் கதறல் எதற்காக?
அம்மனை பார்க்க சென்றால் ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலைமை இருப்பதாகவும் புலம்புகின்றனர். எனவே கோயிலின் அனைத்து பகுதிகளிலும் காவலாளிகளை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும்,

தஞ்சாவூர்: மிகவும் பிரசிதித்த பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. ஒரு புறம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மறுபுறம் மிரட்டும் நாய்கள் தொல்லை என்று மாரியம்மா எங்களை காப்பாற்று என்று கதறுகின்றனர்.
சமயபுரம் கோயில்:
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாக சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது. திருச்சி காவிரி கரை ஓரமாக உள்ள இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். தங்கள் குடும்பக்கவலை தீர, குழந்தைகள் படிப்பு, நல்ல வேலை என்று பல்வேறு குடும்பப்பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்று வேண்டுதல்களுடன் வருகி;னறர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அப்போது இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும். மேலும் குழந்தைகளின் உடல் நலன், குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.
இடைத்தரகர்கள் தொல்லை:
இந்நிலையில் தொடர் விடுமுறை மற்றும் மாசி மாதத்தின் காரணமாக அதிகளவில் பக்தர்கள் தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதை பயன்படுத்தி இடைத்தரகர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபம் மற்றும் சுவாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்வதாக கூறி அவர்களிடம் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
இதையும் படிங்க: மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மேலும் இடைத்தரகர்களுக்கு கோவில் காவலர்கள், அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்தபடியே உள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை ஏதும் எடுக்கப்படவில்லை என்று பக்தர்கள் புலம்புகின்றனர். இது ஒருபுறம் என்றால் தரிசனத்திற்காக பக்தர்கள் செல்லும் வரிசை பாதையில் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
நாய்கள் தொல்லை:
அன்னதான மண்டபத்தின் அருகே இருந்து பக்தர்கள் தனி வழியில் சுவாமி தரிசனம் செய்ய அனுப்பப்படுகின்றனர். திருப்பதியைப் போல தடுப்புகள் அமைத்து சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் வசதிக்காக மண்டபங்கள் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு நிழல் பகுதியில் அவர்கள் வரிசையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால் தற்போது பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகளில் நாய்கள் தொல்லை மிக அதிகமாக உள்ளது. வெயில் காரணமாக நாய்கள் அனைத்தும் பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகளில் ஆங்காங்கே தூங்கி வருகின்றன. சில நேரங்களில் அவற்றுக்குள்ளாக சண்டை வந்து பக்தர்கள் மீது விழுந்து அவர்களையும் கடித்து விடுகின்றன.
கோயிலை தவிர பிற பகுதிகளில் முற்றிலுமாக காவலாளிகள் இல்லாததால் பக்தர்கள் நாய்க்கடி தொல்லையால் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. இலவச தரிசனத்திற்கு செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாய்கள் பயத்துடனே செல்லும் நிலை உள்ளது.
அம்மனை பார்க்க சென்றால் ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலைமை இருப்பதாகவும் புலம்புகின்றனர். எனவே கோயிலின் அனைத்து பகுதிகளிலும் காவலாளிகளை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும், கோயில் வளாகத்தில் சுற்றி தெரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடுமை கொடுமைன்னு கோயிலுக்!கு வந்தா இங்கேயும் இவ்வளவு கொடுமையா என்று பக்தர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

