TVK VIJAY : நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
TVK VIJAY : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் விஜய் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த நிலையில், நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் களத்தில் விஜய்
தமிழகத்தில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. அந்த வகையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். அடுத்ததாக மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்று பயணம் செல்ல விஜய் திட்டம் வகுத்தார். அந்த வகையில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெற்றிகரமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்தி முடித்தார். அடுத்தாக கரூர் மாவட்டத்திற்கு மதியம் செல்ல வேண்டிய விஜய், இரவு நேரத்தில் சென்ற நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் துடி துடித்து உயிரிழந்தனர்.
கரூர் சம்பவம் - சிபிஐ விசாரணை
இந்த சம்பவம் நாட்டையை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக முதலில் தமிழக சிறப்பு குழு போலீசார் விசாரணை நடத்திய நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டது. அந்த வகையில் சிபிஐ போலீசார் கரூரில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அடுத்தக்கட்டமாக தவெக நிர்வாகிகளையும் டெல்லிக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல தவெக தலைவர் விஜய்யையும் நேரில் ஆஜராக கடந்த ஜனவரி மாதம் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து தவெக தலைவர் விஜய் இரண்டு முறை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது சிபிஐ தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விஜய் பதிலளித்தார்.
நாளை டெல்லிக்கு வர உத்தரவு
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், நாளை தவெக சார்பாக வேட்பாளர் நேர்காணல் நடத்த தவெக தலைமை திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் நாளை டெல்லி சிபிஐ அலுவலத்தில் விஜய் ஆஜராக சிபிஐ சம்மன் அளித்துள்ளது. எனவே நாளைய தினம் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தமிழக தேர்தல் காரணமாக தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால் மற்றொரு தேதியில் விசாரணைக்கு வருவதாக விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை சிபிஐ தரப்பு இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது. எனவே விஜய் நாளைய தினம் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் பட்சத்தில் இந்த விசாரணை நாளை ஒரு நாள் மட்டும் நடைபெறுமா.? அல்லது தொடருமா.? என்பதை நாளைய விசாரணை முடிவில் தான் தெரியவரும் என டெல்லி வட்டார தகவல்களாக உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















