Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
மத்திய கிழக்கில் போர் வெடித்துள்ள சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 டாலர்களை தாண்டிவிட்டது. ஆனால், விலை உயர்வு என்று கூறுபவர்களை விமர்சித்து ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தொடங்கிய நிலையில், ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே, ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அது குறித்து பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், விலை உயர்வு பற்றி பேசுபவர்கள் முட்டாள்கள் என்று விமர்சித்துள்ளார். அவரது பதிவு குறித்து பார்க்கலாம்.
வெடித்த போர் - ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்
அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு ஈரானிற்கு ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், பிப்ரவரி மாத இறுதியில் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற அடுத்த நாளே ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள்.
இதைத் தொடர்ந்து, ஈரானும் பதில் தாக்குதலை தொடங்கியது. எனினும், முதல் நாளிலேயே ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, அதற்கு பழிவாங்கும் விதமாக ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியது. அமெரிக்காவிற்கு ராணுவ தளங்களை வழங்கிய அரபு நாடுகள் மீது கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில், துபாய், குவைத்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகின.
அங்குள்ள எண்ணெய் கிடங்குகளும் குறிவைக்கப்பட்டன. அதோடு மட்டுமல்லாமல், சர்வதேச எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய வழித்தடமாக விளங்கம் ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் முடக்கியது. அந்த வழியாக செல்லும் எதிரி நாட்டு கப்பல்கள் தாக்கப்படும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்ததால், கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
100 டாலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை
இதன் காரணமாக, ஏராளமான எண்ணெய் கப்பல்கள் கடலில் தேங்கியதால், உலக அளவில் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக இன்று 25 சதவித அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு பதிவாகி அதிர்ச்சி கொடுத்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 93 டாலர்களாகவும், WTI கச்சா எண்ணெய் 116 டாலர்களாகவும் வர்த்தகமாகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இது பீப்பாய் ஒன்றிற்கு 92.62 டாலர்களாக இருந்தது. கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களை தாண்டியுள்ளது.
மத்திய கிழக்கு போர் தொடர்ந்தால், கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 150 டாலர்களை தாண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
விலை உயர்வு குறித்து பேசுபவர்கள் முட்டாள்கள்: ட்ரம்ப்
இப்படிப்பட்ட சூழலில், கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இது குறுகிய கால விலை உயர்வு தான் என்றும், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டப்பட்டதும், கச்சா எண்ணெய் விலை விரைவாக குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது, அமெரிக்காவிற்கும், உலகிற்கும், பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக செலுத்தப்படும் மிகச் சிறிய விலை தான் என்று கூறியுள்ள ட்ரம்ப், விலை உயர்வு குறித்து முட்டாள்கள் மட்டுமே வித்தியாசமாக சிந்திப்பார்கள் என்றும் விமர்சித்துள்ளார். அவரது இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















