10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
சாட்ஜிபிடி மூலம் பிட்; தேர்வு அறையில் ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்- அதிர்ச்சி பின்னணி!

மகாராஷ்டிர மாநிலத்தில் 10, 12ஆம் வகுப்பு மாநில பொதுத்தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதில் தேர்வு மையத்தில், சாட்ஜிபிடியை பயன்படுத்தி மாணவர்கள் பதில்களை காப்பி அடிக்க வைத்த ஆசிரியர்கள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மாநிலம் முழுவதும் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்வதாகவும் அதற்கு சாட்ஜிபிடி-ஐப் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.
81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
இதைத் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மகாராஷ்டிராவின் பீட் மாநிலத்தில் அதிக அளவிலான மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இங்கு மட்டும் 81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். முதல் கட்டமாக 17 ஆசிரியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.
குறிப்பாக செளஸ்லா தேர்வு மையத்தில் அதிக அளவிலான பணியிடை நீக்கங்கள் நடந்துள்ளன. இதன்மூலம் தொழில்நுட்பம் தவறுதலாகப் பயன்படுத்தப்படுவதாகவும் பொதுத் தேர்வுகளின் மாண்பு பாதிக்கப்படுவதாகவும் எதிர் குரல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், தேர்வுகளின் தரத்தை உறுதி செய்யவும் வருங்காலத்தில் இத்தகைய மோசடி நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
கடும் ஒழுங்கு நடவடிக்கை
தேர்வு மையங்களில் மோசடி நடத்துவோர் மீதும் விதிகளை மீறுவோர் மீதும் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மகாராஷ்டிர கல்வி வாரியம் முடிவெடுத்து உள்ளது. அதேபோல தேர்வு மையங்கள் மீது ட்ரோன்களைப் பறக்க விட்டுக் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு எல்லாத் துறைகளிலும் அசுர வேகத்தில் பாய்ச்சலை நிகழ்த்தி வரும் நிலையில், பள்ளிகளிலேயே மாணவர்கள் வினாத் தாள்களுக்கு காப்பி அடிக்கப் பயன்படுத்தப்பட்டு இருப்பதும் அதற்கு ஆசிரியர்களே உதவி செய்து இருப்பதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
























