ONE NATION ONE ELECTION : ஒரே நாடு ஒரே தேர்தல்... நோயை விட மோசமான மருந்து- பாஜக அரசுக்கு எதிராக இறங்கி அடித்த ஸ்டாலின்
ONE NATION ONE ELECTION : ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் கட்டமைப்பு பாதிப்புகள் ஆழமானவை. இது அரசியலமைப்பின் அடையாளத்தையே மாற்றி, அடிப்படை அமைப்புக் கொள்கையை மீறுகிறது. இந்தியா இந்த தவறை செய்யக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்
நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து நாடாளுமன்றம் மற்றும் அனைத்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவதற்கான திட்டத்தை முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை தற்போது மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்கப்படவுள்ளது.
நோயை விட மோசமான மருந்து
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பது நோயை விட மோசமான மருந்து என தெரிவித்துள்ளார். அந்த வகையில், ONOE நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கத்தையே தலைகீழாக மாற்றுகிறது, கலைப்பை நிர்வாக சிரமமாகக் கருதுகிறது மற்றும் சட்டமன்ற பொறுப்புணர்வை பலவீனப்படுத்துவதை நோக்கி இந்தியாவை நுட்பமாக மாற்றுகிறது.
கூட்டாட்சி முறையை மீறும் அபாயம்
இது சட்டமன்ற நம்பிக்கை சரிந்துவிட்டதால் அல்ல, மாறாக தேசிய தேர்தல் நாட்காட்டியுடன் ஒத்துப்போகும் வகையில் மாநில ஆணைகளை துண்டிக்க அனுமதிக்கிறது. ஒத்திசைவு என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்படாத நிர்வாகத்தை நீடிக்கச் செய்வதன் மூலம் கூட்டாட்சி முறையை மீறும் அபாயமும் உள்ளது. அரசியலமைப்பு சமநிலையையும், அதிகாரத்தை பொறுப்பேற்க வைக்கும் மக்களின் உரிமையையும் பலிகொடுத்து, நிர்வாக வசதிக்காக இந்தியாவின் ஜனநாயகம் மறுவடிவமைப்பு செய்யப்படக்கூடாது என அந்த பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் கட்டுரை
இந்த நிலையில் ஆங்கில நாளேடு ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கட்டுரையில், பாராளுமன்ற நிலைக் குழுவின் மதிப்பீட்டுப்படி, லோக்சபா மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களின் மொத்தச் செலவு சுமார் ரூ.4,500 கோடி(2015–16) ஆகும் — இது ஒன்றிய பட்ஜெட்டின் சுமார் 0.25% மற்றும் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் 0.03% மட்டுமே. PRS தரவுகளின்படி, லோக்சபா தேர்தல்களின் செலவு 0.02% முதல் 0.05% வரை (1957–2014) இருந்துள்ளது. தேர்தல்கள் கட்டங்களாக நடைபெறுகின்றன (2024இல் 82 நாள்கள்), இதனால் தேர்தல் ஆணையம் EVMகள், VVPATகள் மற்றும் பாதுகாப்புப் படைகளை மாறிமாறிப் பயன்படுத்த முடிகிறது.
ஒரே நேரத் தேர்தல்கள் இந்த நெகிழ்வுத்தன்மையை நீக்கி, அதிக செலவான புதிய வளங்களைத் தேவைப்படுத்தும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1%க்கும் குறைவான செலவைச் சேமிக்க அரசியலமைப்பைத் திருத்தி கூட்டாட்சியை பலவீனப்படுத்துவது புத்திசாலித்தனமானதா? தேர்தல்கள் குறைக்க வேண்டிய நிர்வாகச் செலவாக அல்ல; அது தன்னாட்சியின் மீண்டும்மீண்டும் செலுத்தப்படும் விலையாகும் — அதிகாரம் மக்களிடம் பொறுப்புடன் இருக்கச் செய்வதற்கான கட்டாயமான ஜனநாயகச் செலவாகும்.
அடிபடை கொள்கையை மீறுகிறது
தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஒன்றியம்-மாநில உறவுகள் குறித்த நீதிபதி குரியன் ஜோசப் குழு, தனது அறிக்கையின் முதல் பகுதியில் (பிப்ரவரி 2026) இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசும் ஏற்றுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல்’ முன்மொழிவால் வாக்குறுதி அளிக்கப்படும். நன்மைகள் மிகைப்படுத்தப்பட்டவை; ஆனால், அதன் கட்டமைப்பு பாதிப்புகள் ஆழமானவை. இது அரசியலமைப்பின் அடையாளத்தையே மாற்றி, அடிப்படை அமைப்புக் கொள்கையை மீறுகிறது. இந்தியா இந்தோனேஷியாவின் தவறை மீண்டும் செய்யக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















