திருச்சி திமுக மாநாடு: 2026 தேர்தலில் திருப்புமுனையாகுமா? ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவாரா?
திராவிட மாடல் 2.0க்கான முக்கியமான செயல் திட்டங்கள், யாருமே எதிர்பார்க்காத தேர்தல் வாக்குறுதிகளை மாநாட்டு மேடையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு கவனம் ஈர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி

தஞ்சாவூர்: திருச்சியில் நாளை நடக்கும் திமுக மாநில மாநாடு தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநாட்டில் திமுக பல அட்டகாசமான தேர்தல் அறிவிப்புகளை வெளியிடும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அறிவிப்புகள் வருமா?
திருச்சியில் நாளைய தினம் மிகவும் பிரம்மாண்ட மாநில மாநாட்டை திமுக நடத்துக்கிறது. இது வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இதுவரை காணாத சவாலை அரசியல் கட்சிகளுக்கு அளித்திருக்கிறது என்றால் மிகையில்லை. முக்கிய காரணம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை. நடிகர் விஜய்யின் நட்சத்திர அந்தஸ்து, இளைஞர்கள், பெண்கள் மத்தியிலான ஈர்ப்பு, அரசியலற்ற முதல்முறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்களின் பார்வை, மாற்று அரசியலுக்கான தேர்வு எனப் பல விஷயங்கள் தவெகவிற்கு சாதகமாக மாறி கொண்டிருக்கிறது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தவெக சார்பாக நேற்று மாலை மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய், மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் திட்டங்களை அறிவித்தார். அதன்படி, மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகை ரூ.2,500ஆக உயர்த்தப்படும். அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். மகளிர் வெற்றிப்பயணம் திட்டம் மூலம் எங்கிருந்து அரசு பஸ்சில் சென்றாலும் இலவசம், அண்ணன் சீர் திட்டம் மூலமாக பெண்கள் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், பட்டு சேலை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இவற்றை இரண்டு திராவிடக் கட்சிகளும் உற்று கவனித்து வருகின்றன. இந்நிலையில் தான் திருச்சியில் பிரம்மாண்ட மாநில மாநாட்டிற்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது. நாளைய தினம் மாநிலம் முழுவதிலும் இருந்து உடன்பிறப்புகள் திருச்சிக்கு அலைகடலென திரண்டு வர வேண்டும் என்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்த சூழலில் திருச்சி திமுக மாநில மாநாடு மீண்டும் ஒரு திருப்புமுனைக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. திருச்சி என்றாலே திருப்புமுனை என திமுகவின் வரலாற்றில் வலுவான இடம் பிடித்து விட்டது. இடம்பெற்று விட்டது. 1956ம் ஆண்டு திருச்சியில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டில் திமுக தேர்தலில் போட்டியிட வேண்டுமா? இல்லையா? என்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தொண்டர்கள் அளித்த ஆதரவின் பேரில் தான் முதல்முறை 1957 சட்டமன்றத் தேர்தலில் திமுக களம் கண்டது. இதில் கலைஞர் கருணாநிதியின் முதல் தேர்தல் வெற்றி ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் தான் நிகழ்ந்தது.
அதன்பிறகு 2006, 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக திருச்சியில் மாநாடு நடத்தி திமுக ஆட்சியை கைப்பற்றியது. அதிலும் கலைஞரும், ஜெயலலிதாவும் ஏற்படுத்திய வெற்றிடத்தை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் 2021ம் ஆண்டு திருச்சி சிறுகனூரில் நடந்த மாநில மாநாடு ஆட்சியை பிடிக்க பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதில் முக்கிய உறுதிமொழிகளை அளித்து கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் வெற்றியை அடைந்தனர்.
இந்நிலையில்தான் திருச்சியில் நாளை மிகவும் பிரம்மாண்டமான மாநாட்டை திமுக நடத்துகிறது. 100 அடி உயர கொடி கம்பம், மிகப்பெரிய மேடை, 5 லட்சம் நாற்காலிகள், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் வசதி, பல லட்சம் லிட்டர் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்முறை 10 லட்சம் தொண்டர்களை திரட்டுவதற்கு திமுக முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தங்களின் செல்வாக்கை தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, மற்ற அரசியல் கட்சிகளுக்கும் காண்பிக்கவுள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே எந்த கட்சியும் அமைக்காத வகையில் 25க்கும் மேற்பட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியின் கீழ் ஒருங்கிணைத்துள்ளனர். கூட்டணிக்குள் எழும் சலசலப்புகளை மிகவும் சாதுரியமாக ஸ்டாலின் முடித்து வைத்து வருகிறார். அதற்கு உதாரணம் கூட்டணியை விட்டு காங்கிரஸ் சென்று விடும் என்று அனைவரும் நம்பிய வேளையில் காங்கிரஸ் உடனான கூட்டணியை வலுப்படுத்தி காட்டிவிட்டார். அடுத்து தமிழகத்தையே திருப்பி பார்க்கும் வகையிலான தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் திருச்சி மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதில் திராவிட மாடல் 2.0க்கான முக்கியமான செயல் திட்டங்கள், யாருமே எதிர்பார்க்காத தேர்தல் வாக்குறுதிகளை மாநாட்டு மேடையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு கவனம் ஈர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி திமுக மாநில மாநாட்டின் முக்கிய நோக்கம் என்பது தொண்டர்களை உற்சாகப்படுத்துவது. குறிப்பாக 2026 தேர்தல் பணிகளில் பூத் கமிட்டி முதல் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் வரை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும் என்கின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















