பாம்புடன் ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு வந்த நபர்... சேலத்தில் பரபரப்பு
பாம்பை மருத்துவமனைக்கு வெளியே வைத்துவிட்டு சிகிச்சைக்காக சிவப்பிரகாசத்தை அரசு மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியகாடம்பட்டி பகுதியை சேர்ந்த சிவபிரகாசம் (44) என்பவர் தறித்தொழில் செய்து வருகிறார். இவர் சுற்றுவட்டார பகுதிகளில் பாம்பு பிடிக்கும் தொழிலையும் மேற்கொண்டு வருகிறார். இதுவரை சிவபிரகாசம் 3500 பாம்புகள் பிடித்துள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் மரக்கடையில் கண்ணாடி விரியன் பாம்பு புகுந்த நிலையில், அதை பிடிப்பதற்காக சிவப்பிரகாசம் சென்றுள்ளார். பாம்பை பிடித்தபோது சிவப்பிரகாசத்தை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக பாம்பை பிடித்துக் கொண்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு முதலுதவி கொடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறிப்பாக ஆம்புலன்ஸில் பாம்புடன் தான் வருவேன் என்று சிவப்பிரகாசம் கூறியுள்ளார். இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸில் பாம்புடன் சிவப்பிரகாசம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் பாம்புடன் வந்த சிவப்பிரகாசத்தை கண்டு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அரசு மருத்துவமனை முழுவதும் பரபரப்பானது. இதையடுத்து பாம்பை மருத்துவமனைக்கு வெளியே வைத்துவிட்டு சிகிச்சைக்காக சிவப்பிரகாசத்தை அரசு மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் விரைந்து வந்த வனத்துறை வீரர்கள் பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். இதனால் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

