விரட்டிய காட்டு யானை... அதிர்ச்சிலேயே உயிரைவிட்ட காவலாளி - கோவையில் சோகம்
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு வருகிறது. இவ்வாறு கிராமப் பகுதிகளுக்குள் வரும் யானைகளை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிகளுக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விரட்டிய காட்டு யானை
குறிப்பாக கோவை மாவட்டம் மருதமலை மற்றும் தொண்டாமுத்தூர் வனப்பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவியதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த யானைகள் மலை அடிவாரம் பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. நேற்று மருதமலை, சோமையம்பாளையம் ஆகிய பகுதியில் 13 காட்டு யானைகள் முகாமிட்டு இருந்த. இந்த யானைகளை வனத்துறையினர் அதிகாலை 5.30 மணி அளவில் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த நிலையில் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்ததுள்ளது. சுற்றுச்சூழல் துறை கட்டிடத்திற்கு அருகில் உள்ள முட்புதரில் ஒற்றை காட்டு யானை நிற்பதாக காவலாளிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவலாளிகள் சுரேஷ், சண்முகம் ஆகியோர் அங்கே சென்று யானையை விரட்ட முயன்றனர். அப்போது திடீரென அந்த ஒற்றை ஆண் காட்டு யானை அவர்களை தாக்க முற்பட்டு விரட்டி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் யானையிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடிள்ளனர். அப்போது இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் சண்முகம் (57) அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சுரேஷ் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அதே சமயம் யானை வந்த தகவலை அறிந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் லட்சுமண பெருமாள் சாமி சுற்றுச்சூழல் துறை கட்டிடத்தின் முன்பு நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது யானை பிளிறியதில் பயத்தில் கீழே விழுந்ததில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரையும் மீட்டு வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் அச்சம்
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ”நேற்று இரவு முதல் அதிகாலை வரை யானைகள் நடமாட்டம் குறித்த தகவல் இருந்ததால் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் மீண்டும் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலையில் அனைத்து யானைகளும் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில் வனப் பணியாளர்கள் யானை கணக்கெடுப்பு பணிக்காக சென்றுள்ளனர். அப்போது தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. காவலாளிகள் யானையை விரட்ட முயற்சி மேற்கொண்ட போது, யானை அவர்களை விரட்டியுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகம் கழகப் பகுதியில் யானைகள் உள்ளதா என்று தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு தணிக்கை செய்து வரப்படுகிறது.
மேலும் பாரதியார் பல்கலைக்கழகம் வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் வன விலங்குகளிடமிருந்து பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்க்கு ஏற்கனவே நோட்டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர். பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதிக்கு காட்டு யானை வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Before You Go
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















