“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை செந்தில் பாலாஜி தரப்பு வாங்க மறுத்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செந்தில் பாலாஜி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்,
கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மீண்டும் ஆஜராகும்படி, தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், தேர்தல் பணிகள் காரணமாக நேரில் ஆஜராவதிலிருந்து 15 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டுமெனவும், விசாரணையை டெல்லியில் இல்லாமல் சென்னையிலேயே நடத்த வேண்டும் என்றும் தவெக தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதுதொடர்பாக சிபிஐ பரிசீலித்து வருவதாகவும், சம்மனில் குறிப்பிட்டுள்ளபடி இன்று விஜய் விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயை இணைக்க அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, சிபிஐ அனுப்பிய சம்மன் கருதபப்டுகிறது.
செந்தில் பாலாஜியின் சதி காரணமாகவே இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தவெகவினர் அப்போதே குற்றம்சாட்டி இருந்தனர். ஆனால், தவெகவின் முன்னேற்பாட்டில் இருந்த குறைபாடுகள் காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக, பல்வேறு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை கொண்டு செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருந்தார்.
இந்நிலையில் தான், கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல்களின்படி, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், மார்ச் 10ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜி, அவரது வீட்டில் இருப்பவர்கள் அல்லது அலுவலக ஊழியர்கள் என யாருமே அந்த சம்மனை பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, இ-மெயில் மூலமாகவும் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்தநிலையில் செந்தில் பாலாஜி இதுக்குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.. வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்.. என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, கொங்கு மண்டல பொறுப்பாளரான செந்தில் பாலாஜியை முடக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு அனுப்பப்பட்ட சம்மனும் பார்க்கப்படுகிறது.























