விஸ்வரூபம் எடுக்கும் LPG தட்டுப்பாடு… உணவகங்களில் மெனு குறைப்பு
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கோவை சார்ந்த முன்னணி உணவகம் தனது சேவையில் மாற்றம் செய்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, தமிழகத்தின் சில முன்னணி உணவகங்களின் சேவைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து உணவக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் மார்ச் 10, 2026 முதல் தற்காலிகமாக உணவுப் பட்டியலில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகம் சேவையில் தற்காலிக மாற்றம்
அதன்படி, அனைத்து வகையான உணவுகளும் வழக்கம்போல் கிடைக்காது. சமையலுக்கு குறைந்த எரிபொருள் பயன்படும் முக்கியமான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உணவுப் பொருட்கள் மட்டுமே வழங்கப்படும். மேலும், சில உணவுகளின் விற்பனை நேரங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தினசரி செயல்பாடுகளில் சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். இருப்பினும், சேவையை முழுமையாக நிறுத்தாமல் தொடர்வதற்காக இந்த தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிலைமையைச் சீர்செய்ய அரசு மற்றும் எரிவாயு விநியோகஸ்தர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றங்களால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் புரிந்துணர்வுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மார்ச் 10 முதல் (இன்று) அமலுக்கு வருவதால், உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.























