CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Class 10 Exam Cancelled: மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து; மதிப்பீட்டு முறை எப்படி?

மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக, அங்கு நடைபெற இருந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முழுமையாக ரத்து செய்துள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு, பெற்றோர்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
தேர்வுகள் ரத்து மற்றும் ஒத்திவைப்பு
மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் குறிப்பாக இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இதன்படி, மார்ச் 7 முதல் 11 வரை ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத், பஹ்ரைன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் நடைபெறவிருந்த அனைத்து 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பு
அதேசமயம், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. போர்ச் சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
மதிப்பீட்டு முறை
10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அம்மாணவர்களுக்கான முடிவுகள் எவ்வாறு வெளியிடப்படும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விளக்கமளித்துள்ள சிபிஎஸ்இ, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான மதிப்பெண்கள், வாரியத்தால் உருவாக்கப்படும் ஒரு சிறப்பு மற்றும் நியாயமான மதிப்பீட்டு முறை (Objective criterion/ Special marking scheme) அடிப்படையில் கணக்கிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் முடிவுகள் வெளியாகும் முறை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கல்வியாளர்கள் வரவேற்பு
வளைகுடா நாடுகளில் நிலவும் ஏவுகணைத் தாக்குதல் அபாயம் மற்றும் வான்வழிப் போக்குவரத்து முடக்கம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதைப் பெற்றோர்களும் கல்வியாளர்களும் வரவேற்றுள்ளனர். மாணவர்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளித்து எடுக்கப்பட்ட இந்த முடிவு, அவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்






















