சூடு பிடித்த தேர்தல் 2026 களம்… கோவைக்கு என்ட்ரியான மத்திய பாதுகாப்புப் படை
தமிழக தேர்தல் 2026: கோவையில் மத்திய பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், கோவை மாநகரில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும், பொதுமக்கள் இடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறையினரின் அடையாள அணிவகுப்பு (Flag March) இன்று நடைபெற்றது.
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு ஏற்கனவே 50 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் (CAPF) ஒதுக்கப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகருக்கு வந்துள்ள மத்திய துணை ராணுவப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), விரைவு அதிரடிப்படை (RAF) மற்றும் தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் படையினர் கலந்து கொண்டு அணிவகுப்பு நடத்தினர். மொத்தம் 150க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
கோவையில் மத்திய படையினர் அணிவகுப்பு
இந்த அணிவகுப்பு தெற்கு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. சுமார் 2.7 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில், பாதுகாப்புப் படையினர் நவீன ஆயுதங்களுடன் சீருடையில் நகரின் முக்கிய சாலைகளில் நடைபயணம் மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு பொதுமக்கள் இடையே பாதுகாப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன், அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
கோவை மாநகரில் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க மத்திய பாதுகாப்புப் படையினர் நியமிக்கப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களுடன் இணைந்து வாகன சோதனை, ரோந்து பணி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபடுவார்கள்.
வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக, தேர்தல் நடைபெறும் வரை முக்கிய பகுதிகளில் தினசரி கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.























