விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குறித்து நான் பேச வேண்டிய நிலை வந்தால் தயார் என தன் மீதான் விமர்சனங்களுக்கு இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் பதில் தெரிவித்துள்ளார்.

விஜய் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் சம்மதம் தெரிவித்தால் நான் பேச தயார் என இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.
சர்ச்சையான விஜய் விவகாரம்
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் முதல்முறையாக களம் காண்கிறார். இப்படியான நிலையில் அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் விவாகரத்து தொடர்பான மனுவில் நடிகை ஒருவருடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த நடிகை பெயரை குறிப்பிடாத நிலையில் த்ரிஷா என பலரும் கணித்திருந்தனர். அதனை மேலும் உறுதிப்படுத்தும் வண்ணம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய், த்ரிஷா இருவரும் ஜோடியாக வந்து அதிர்ச்சியளித்தனர். இந்த நிலையில் விஜய், த்ரிஷா பற்றி சினிமா பிரபலங்கள் பலரும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் விஜய் குறித்து முன்னால் தெரிவித்த கருத்துகளையும் இப்போது சொன்னது போல பலர் பதிவிட்டு வருகின்றனர்.
லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவு
அப்படியாக மார்ச் 8ம் தேதி லட்சுமி ராமகிருஷ்ணன் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “விஜயின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றியும், அவருடைய அரசியல் வருகை பற்றியும் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. சமீபத்தில் நான் ஒரு மேடையில் பேசிய சில வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விஜய் தனிப்பட்ட, அரசியல் வாழ்க்கையோடு இணைக்கப்பட்டுள்ளது.
விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா குறித்து பேசுவோர், நீதிக்காக போராட வழியில்லாமல், சட்ட உதவியோ பொருளாதார ஆதரவோ இல்லாமல், அடுத்த உணவு கூட உறுதியில்லாமல் வாழும் பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் இதே அளவு கவனம் செலுத்தப்பட வேண்டாமா? என கேள்வியெழுப்பினார். இந்த பதிவுக்கு பலரும் எதிர்கருத்து தெரிவித்தனர்.
விஜய் விவகாரம் பேச தயார்
இந்த நிலையில், சமூக வலைத்தள விமர்சகர் கிஷோர் கே சுவாமி வெளியிட்ட பதிவில், “நீங்க வட சென்னையில் இருக்கும் விளிம்பு நிலை குடும்பங்களின் வீட்டு சமாச்சாரங்களை தான் கடை வைத்து காசு பார்ப்பீர்கள் மேடம். விஜய் தனிப்பட்ட விஷயம் குறித்து நீங்க எப்படி பேச முடியும்?” என கேட்டார்.
அதற்கு பதிலளித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், “விஜய் குறித்து நான் பேச வேண்டிய நிலை வந்தால், அது அவரின் முன்னிலையிலும், சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்துடனும், அவர்களே கேட்டால் மட்டுமே பேசுவேன். உங்களுக்கு உண்மையாகவே சமூக அக்கறை இருந்தால், உதவி மற்றும் வழிகாட்டல் தேவைப்படும் போராடிக் கொண்டிருக்கும் மக்களை நான் உங்களிடம் அறிமுகப்படுத்தத் தயாராக இருக்கிறேன். அவர்களின் முன்னிலையில் அவர்களுடன் பேசுங்கள், அவர்களின் பிரச்சனைகளில் ஈடுபடுங்கள், தீர்வுகளை முன்வையுங்கள்.
வீடு கட்டித் தர முடியுமா?
சிறு தொழில் தொடங்க உதவ முடியுமா?
மருத்துவ உதவி செய்ய முடியுமா?
படிக்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்ய முடியுமா?
அவர்களை வழிநடத்தி, வாழ்க்கையில் முன்னேற உதவ முடியுமா?
அதை செய்ய தயாரா?
அல்லது ட்விட்டரில் போராடுவது மட்டும்தானா சாத்தியம்?” என பதிலடி கொடுத்துள்ளார்.























