M.S.Baskar | ’அவரு ஒரு தங்கம்..மரணம் ஜீரணிக்க முடியல ‘ - விவேக்கின் நினைவுகளை பகிர்ந்த M.S.பாஸ்கர்!
அவரின் மறைவு குறித்த செய்தி எனக்கு வந்தபோது நான் கிண்டல் செய்யாதீங்க என்றுதான் முதலில் கூறினேன்...

கொரோனா காலக்கட்டங்களின் திரைத்துறையை சேர்ந்த நிறைய பிரபலங்கள் உயிரிழந்தனர். அதில் ஒருவர்தான் நடிகர் விவேக். சின்ன கலைவானர் என அன்போடு அழைக்கப்பட்ட விவேக்கின் மரணம் அவரின் உறவினர்கள், திரைத்துறையினர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. சமூக நலனில் அதிக அக்கறை கொண்ட விவேக் அவர்கள் அப்துல்கலாம் சொல்லிய வழியை அப்படியே பின்பற்றி நடந்தார். தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் சரி , அதில் வக்கிரங்களை புத்தாமல் , மற்றவர்களை கேலி கிண்டல் செய்யாமல் நாகரீகமான முறையில் மக்களை சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்தவர் விவேக்.

இந்த நிலையில் மூத்த காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான M.S . பாஸ்கர் அவர்கள் நடிகர் விவேக் குறித்த நினைவுகளை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் “ எனது தம்பியும் விவேக்கும் ஒன்றாகத்தான் தலைமை செயலகத்தில் வேலை செய்தார்கள். எனவே எனக்கு விவேக்கை ஆரம்ப காலத்திலிருந்தே தெரியும். நான் தம்பி என்றுதான் கூப்பிடுவேன்..அவர் என்னை பாஸ்கரு வாமா ..என்பார். விவேக் பொதுநலனில் அதிக அக்கறை கொண்ட நபர். நான் அவருடன் நடித்த படங்கள் ஏராளம். அவர் சில படங்களில் நடிக்க என்னை அழைத்தும் இருக்கிறார்.பரிந்துரைகளும் கொடுத்திருக்கிறார். அப்துல்கலாம் அவர்கள் மீது கொண்ட பக்தியால் , பூமியை பசுமையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டார். அவரின் மறைவு குறித்த செய்தி எனக்கு வந்தபோது நான் கிண்டல் செய்யாதீங்க என்றுதான் முதலில் கூறினேன். அதன் பிறகு செய்தி தொலைக்காட்சிகளை பார்த்துதான் உறுதி செய்தேன். நீர்குமிழி போன்றதுதான் வாழ்க்கை. நல்லா இருந்த மனிதர் . மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான்.அவரின் மரணம் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் விவேக் தம்பி மிகவும் தங்கமான மனிதர் “ என கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தடுப்பூசி செலுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் விவேக் . அதன் பிறகு உடல்நிலையில் தொய்வு ஏற்ப்பட்டதால் ஓய்வெடுத்த விவேக் , ஏப்ரல் 17 ஆம் தேதி இயற்கை எய்தினார். தடுப்பூசி செலுத்திய இரண்டே நாள்களில் விவேக் உயிரிழந்ததால் தடுப்பூசி செலுத்தியதால்தான் அவர் இறந்துவிட்டார் என தகவல் பரவியது.ஆனால் மாரடைப்பு காரணமாகத்தான் அவர் உயிரழந்தார் என உறுதி செய்யப்பட்டது. இறந்தாலும் உன்னை ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகள் நமது சின்ன கலைவானர் விவேக் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















