TN Weather Rain: வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
தமிழ்நாட்டில் வெயில் சுட ஆரம்பித்துவிட்ட நிலையில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எப்போது எங்கு மழை பெய்யும்.? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்ட நிலையில், வரும் மார்ச் 4-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எங்கெங்கு எப்போது மழை பெய்யும் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
மார்ச் 4-ம் தேதி வரை மிதமான மழை - வானிலை மையம் அறிக்கை
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ளது. இதனால், தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாளை(27.02.2026) தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள்(28.02.2026) முதல் 1-ம் தேதி வரை, மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 2-ம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச் 3-ம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகள்) ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மார்ச் 4-ம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று முதல் மார்ச் 2-ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வானிலை எப்படி இருக்கும்.?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை(27.02.2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.























