அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
DMK vs Congress: சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், திமுக- காங்கிரஸ் கட்சியிடையே கூட்டணி தொடருமா என கேள்வி எழுந்த நிலையில், நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

நெருங்கும் தேர்தல்- தயாராகும் தமிழக அரசியல் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் மத்தியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதிலும் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் வகையில் திட்டம் போட்டு செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ள திமுக, மேலும் புதிய கட்சிகளை கூட்டணியில் இணைத்து வருகிறது.
திமுகவிற்கு அழுத்தம் கொடுத்த காங்கிரஸ்
இந்த நிலையில் திமுக கூட்டணியில் பல ஆண்டு காலமாக நீடித்து வரும் காங்கிரஸ், கடந்த டிசம்பர் மாதம் திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைத்தது. அந்த குழுவினரும் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது ஆட்சியில் பங்கு, 39 தொகுதிகள் ஒதுக்க வேண்டும், 2 ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால் இதனை திமுக தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.
தொகுதி பங்கீடு - நாளை பேச்சுவார்த்தை
இதனால் தொகுதி பங்கீடு தொடர்பாக குழு அமைக்காமல் திமுக அமைதி காத்தது. இதற்கிடையே காங்கிரஸ் நிர்வாகிகள் ஆட்சியில் பங்கு தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவுகளை பதிவிட்டு வந்தனர். மேலும் காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு சிலர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கூட்டணி தொடர்பாகவும் பேசி வந்தனர்.
இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிக்குமா.? நீடிக்காதா.? பேச்சுவார்த்தைக்கு அழைக்குமா.? அழைக்காதா.? என கேள்விகள் எழுந்த நிலையில், நாளை காங்கிரஸ் கட்சியை தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 1 ராஜ்ய சபா சீட் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதற்கு திமுக தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே காங்கிரஸ் கோரிக்கையை திமுக ஏற்குமா.? இல்லையா என்பது தெரியவரும்























