Naangal Review : குழந்தைகளின் உலகில் நிகழ்த்தப்படும் வன்முறை....நாங்கள் திரைப்பட விமர்சனம்
Naangal Movie Review : அவினாஷ் பிரகாஷ் எழுதி இயக்கியிருக்கும் நாங்கள் திரைப்படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்

தந்தை மகன் உறவு சிக்கல்கள்
தந்தை மகன் இடையிலான உறவு சிக்கல்கள் கலையில் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்படும் களங்களில் ஒன்று. Bigfish , There will be Blood , After Sun என சில படங்கள் உடனடியாக நினைவுக்கு வரும் படங்கள். சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அடலசென்ஸ் என்கிற குற்ந்தொடர் வெளியாகி உலகளவில் கவனமீர்த்தது. இந்த தொடரின் கடைசி எபிசோட் தந்தை மகன் இடையிலான உறவு சிக்கலை பற்றி மிக முக்கியமான உரையாடலை நிகழ்த்தியது. ஜேமீ என்கிற 12 வயது சிறுவன் தன் வயதையொத்த சிறுமியை கொலை செய்துவிடுகிறார். தனது மகனுக்கு எல்லா வசதிகளை செய்துகொடுத்து அவனுக்கு ஒரு நல்ல தந்தையாக இருக்க நினைத்த அவனது தந்தை இறுதியில் இப்படி கூறுகிறார். " சின்ன வயதில் என் தந்தை என்னை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். எனக்கு குழந்தை பிறந்தால் அவர்களை அடிக்கவே கூடாது என நான் அப்போது நினைத்தேன். அதே போல் நான் அவனை ஒருபோதும் அடித்ததில்லை. ஆனால் நான் ஒரு நல்ல தந்தையா ?"
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் வன்முறையை வெளிப்படுத்துவதன் தாக்கம் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படக் கூடியது என்பதை நவீன் உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாம் நம் பெற்றோர்களிடம் எதிர்கொண்ட வன்முறையை நம் குழந்தைகளிடம் காட்டவில்லை என்றாலும் நமது கோபம் , பிரச்சனைகளில் நாம் கையாளும் விதங்களைப் பார்த்தே குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். குறிப்பாக தந்தையை ஒரு முன்னுதாரணமாக பார்க்கும் மகன்கள்.
அந்த வகையில் தமிழில் தந்தை மகன் உறவை மையமாக வைத்து உருவாகி இருக்கும் நாங்கள் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முன்னோடியான கலைப்படைப்பு என்று சொல்லலாம்
நாங்கள் பட விமர்சனம்
அறிமுக இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் எழுதி இயக்கி , ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் நாங்கள் . அப்துல் ரஃபே , மிதுன் . ரித்திக் மோகன் , நிதின் தினேஷ் , பிரார்த்தனா ஶ்ரீகாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலா பவஶ்ரீ கிரியேஷன்ஸ் சார்பாக ஜிவிஎஸ் ராஜூ இப்படத்தை தயாரித்துள்ளார். வேத் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 18 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நாங்கள் படத்தின முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்
கதை
1990களில் ஊட்டியில் தொடங்குகிறது படத்தின் கதை. மூன்று சிறுவர்கள் கார்த்திக் , கெளதம் , துருவ் மற்றும் இவர்களின் தந்தை ராஜ்குமார் இடையில் நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு நாங்கள் திரைப்படம். படத்தின் தொடக்கத்தில் மூன்று சிறுவர்கள் ஒன்றாக சுற்றுகிறார்கள். திரையரங்கில் சென்று படம் பார்ப்பது , வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவது என எல்லாம் முடித்து வீடு வந்து சேர்கிறார்கள். ஆனால் அந்த வீட்டில் அவர்களை வரவேற்கவோ , கதைகளை கேட்கவோ யாரும் இருப்பதில்லை. கரண்ட் , தண்ணீர் இல்லாத பிரம்மாண்டமான வீட்டில் இந்த மூன்று சிறுவர்கள் தங்களுக்கான உலகத்தில் வாழ்கிறார்கள். பள்ளிக்கு கிளம்பிச் செல்கிறார்கள். செல்ல நாய் கேத்தியுடன் விளையாடுகிறார்கள். இந்த குழந்தைகளைப் பார்த்து நமக்கு கரிசனமோ கவலையோ வருவதில்லை. அவர்களின் உலகத்தில் அவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ஒரு விதமான பொறாமையே ஏற்படுகிறது.
வண்ணமையமான அவர்களின் உலகத்தில் உண்மையில் இருள் சூழவது அவர்களின் தந்தை வீட்டிற்கு வரும் போதுதான். ஊட்டியில் பள்ளி ஒன்றை நடத்தி வரும் பிஸ்னஸ்மேன் ராஜ்குமார். தொழிலில் தொடர் சரிவுகளை சந்தித்து வரும் ராஜ்குமார் தனது மூன்று மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். வீட்டை துடைத்து செய்வது , சமைப்பது , என எல்லா வேலைகளையும் தனது மகன்களை செய்ய வைக்கிறார். அவர்கள் சின்ன தவறுகள் செய்தாலும் ஒழுக்கம் என்கிற பெயரில் கடுமையான தண்டனைகளையும் கொடுக்கிறார். மூத்த மகன் கார்த்திக் ஒருவன் மட்டுமே தனது தந்தையுடன் ஓரளவிற்கு உரையாடக் கூடிய இடத்தில் இருக்கிறான். மீதி இருவர் தந்தையைக் கண்டாலே அஞ்சி நடுங்குபவர்களாக இருக்கிறார்கள். சிறுவர்களின் அண்ணை தனது கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார். அவரது மூன்று மகன்களிடமிருந்து பிரித்து வைத்திருப்பவர் ராஜ்குமார். சிதைந்து போன ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சிறுவர்கள் தங்கள் வாழ்க்கையில் அவ்வப்போது தேடிக் கொள்ளும் சின்ன சின்ன ஆசுவாசங்களே நாங்கள் படத்தின் கதை.
குழந்தை வளர்ப்பு குறிப்பாக இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் காட்டும் அதீத வன்முறையின் ஒரு சின்ன உதாரணமே நாங்கள் திரைப்படம். எப்படியான துன்பம் என்றாலும் குழந்தைகளால் தங்கள் உலகத்தை மீட்டுக்கொள்ள முடியும். ஆனால் அதே குழந்தைகள் வளர்ந்து ஆளாகும் போது அவர்கள் இந்த உலகத்தில் எதிர்கொள்ளும் விதமும் அவர்களின் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களுக்கும் இந்த சிறுவயது அழுத்தங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நிகழ்காலத்தில் ஒரு மனிதனாக தோற்கும்போதும் இந்த கடந்த காலத்தின் மேலும் இந்த கடந்த காலத்தின் மீது ஒரு கோபம் வரும் .
தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மையமாக வைத்து அவினாஷ் பிரகாஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆனால் ஒரு வளர்ந்த மனிதனின் கோபம் இந்த படத்தில் இல்லை. மாறாக இந்த நிகழ்வுகளை அந்த குழந்தைகளின் பார்வையில் சொல்லியிருப்பதே இந்த படத்தின் தனித்துவம். தங்களுடைய அப்பா இவ்வளவு கடுமையானவராக இருந்தாலும் மூத்த மகனான கார்த்தி அவர் மீது வைத்திருக்கும் மரியாதை குறைவதில்லை. பெரும்பாலான நிகழ்வுகள் சோகமாக இல்லாமல் ஒரு விதமான கசப்பான நகைச்சுவையோடு சொல்லப்பட்டிருக்கிறது.
வெளிப்பார்வைக்கு ராஜ்குமார் ஒரு மோசமான தந்தைதான். ஆனால் ஒரு தந்தையாக ராஜ்குமார் தோற்பதற்கு அவருக்கான தனிப்பட்ட காரணங்களும் நமக்கு காட்டப்படுகின்றன. அவரது செயல்கள் நியாயப்படுத்தப் படவில்லை. ஆனால் ஏதோ ஒரு அழுத்தம் அவரை தனது குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ள வைக்கிறது. ஒவ்வொரு முறை தனது மகன்களிடம் மோசமாக நடந்துகொண்டு அதை சரிசெய்ய அவரே முயற்சி செய்கிறார். அவர்களை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறார். குடித்துவிட்டு தனது மகன்களை கட்டிப்பிடித்து அழுகிறார். தன் எஸ்டேட்டில் வேலை செய்பவர்களுக்கு ஒரு நல்ல முதலாளியாக இருக்கிறார். ஒரு பள்ளி தலைமை ஆசிரியராக பல மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நபராக இருக்கிறார். ஏதோ ஒரு வகையில் தனது மகன்களின் ஏற்பு அவருக்கு தேவைப்படுகிறது.
ராஜ்குமாரின் மனைவி மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். தன்னிடம் இருப்பதை விட தனது குழந்தைகள் அம்மாவுடன் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கிறார். ஆனால் அவருக்குள் இருக்கும் ஏதோ ஒன்று அவரை தனிமைப்படுத்துகிறது. இந்த காட்சிகள் ராஜ்குமார் தனது தந்தையிடம் பெற்ற தாக்கங்களைப் பற்றி நம்மை யோசிக்க வைக்கின்றன. தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இழக்கும் ராஜ்குமார் தனது மகன்களுக்கு ஒரு நல்ல தந்தையாக இருக்க முயற்சிக்கிறார்.
எழுத்து , இயக்கம் , ஒளிப்பதிவு , படத்தொகுப்பு என ஒரே நபர் அனைத்தையும் கையாண்டிருப்பது இந்த படத்தை இன்னும் தனித்துவமான அனுபவமாக மாற்றுகிறது. தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்துல் ரஃபே மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறுவர்கள் மிதுன் . ரித்திக் மோகன் , நிதின் தினேஷ் இவ்வளவு அழுத்தமான கதையில் தங்கள் குழந்தைமையை இழக்காமல் நடித்திருக்கிறார்கள். பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் கொஞ்சம் நாடகீயத் தன்மையாக இருக்கிறது. மொத்தம் 4 மணி நேரம் நீளமுள்ள இப்படம் திரையரங்கத்திற்காக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் கதை ஒருகட்டத்திற்கு மேல் தேக்கமடைந்ததாக தெரிகிறது. இன்றைய திரையரங்க ரசிகர்களுக்கு இப்படியான படங்களைப் பார்க்கும் பொறுமை இருக்குமா என்பது கேள்விதான் என்றாலும் குழந்தைகள் இப்படத்துடன் இன்னும் நெருக்கமாக தொடர்புபடுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

