Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
Sani Peyarchi 2026: சனிப்பெயர்ச்சி இன்று நிகழ உள்ள நிலையில் விரய சனி, ஜென்ம சனி மற்றும் பாத சனியின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பதை கீழே காணலாம்.

ஜோதிடத்தின்படி சனிப்பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இதன்படி, சனிப்பெயர்ச்சி இன்று நடக்கிறது. சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற உள்ளது.
இந்த சனிப்பெயர்ச்சியில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இதனால், கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியின் இறுதிக்காலமான பாதசனி நாளை தொடங்குகிறது. மீன ராசிக்கு ஜென்ம சனி நாளை தொடங்குகிறது. மேஷ ராசிக்கு சனிப்பெயர்ச்சியின் முதல் கட்டமான விரய சனிக்காலம் தொடங்குகிறது.
இந்த சனிக்காலத்தில் ஏற்படும் நிகழ்வுகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
1. விரய சனி:
ஒருவரின் ராசியில் 12ம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதே விரய சனிக்காலம் ஆகும். ஏழரை சனியின் முதலாவது காலகட்டமான இந்த விரய சனியில் செலவுகள் அதிகரிக்கும். இந்த விரயத்தை சுப விரயமாக மாற்றுவது நல்லது. அதாவது, தங்கம் அல்லது நிலம் வாங்குவதில் முதலீடு செய்யலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாகன பயன்பாட்டில் கவனம் தேவை.
வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நலத்தில் குறிப்பாக தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேச்சில் கூடுதல் கவனம் தேவை. தொழிலில் நிதானமான முடிவுகள் அவசியம். பணியிடத்தில் நெருக்கடி உண்டாகலாம். வேலைப்பளு அதிகரிக்கலாம். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது ஆகும்.
பரிகாரம்: சனிக்கிழமை நாட்களில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் செல்வது சிறப்பாகும். பைரவரை வழிபடுவதும் சிறப்பாகும். சிவ வழிபாடு சிறப்பை உண்டாக்கும்.
2. ஜென்ம சனி:
ஒருவரின் ராசியின் சனி பகவான் 1ம் ராசியில் சஞ்சரிப்பதே ஜென்ம சனி காலம் என்று கூறப்படுகிறது.பொதுவாக, ஜென்ம சனி காலம் என்றாலே இறக்கத்தை தரக்கூடிய காலமாகவே பார்க்கப்படுகிறது. தேவையில்லாத மனத்துயரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடன்பிறப்புகளுடன் தேவையில்லாத மனக்கசப்பு உண்டாகும். அலுவலகத்திலும் பணி சுமை உண்டாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு தொழிலில் முடக்கம் உண்டாக வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மனக்கசப்பு, உறவில் விரிசல்கள் உண்டாக வாய்ப்பு உண்டு. இதனால், எந்தவொரு முடிவும் எடுக்கும் முன்பு கவனமாக சிந்தித்து எடுக்க வேண்டியது அவசியம்.
பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வது நல்லது ஆகும். வியாழக்கிழமை நாட்களில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது ஆகும். சிவாலயங்களுக்குச் செல்வது நன்மை பயக்கும்.
3. பாத சனி:
முதல் கட்டமான விரய சனி, 2ம் கட்டமான ஜென்ம சனி முடிந்து 3வது கட்டமானது பாதசனி. அதாவது, சனி பகவான் ஒரு ராசியின் 2வது வீட்டில் சஞ்சரிப்பதே பாத சனி என்று கூறப்படுகிறது. விரய சனி, ஜென்ம சனி காலத்தை காட்டிலும் பாத சனி காலம் சற்று இலகுவானதாகவும், சாதகமான பலன்களையும் அளிக்கும் ஆற்றல் கொண்டது. கடந்த கால தவறுகளை சரி செய்வதற்கான வாய்ப்புகளும் உண்டாகலாம்.
தவறான வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் பணத்தை இழக்கும் சூழல் உண்டாகும். மனதளவு கடும் சோர்வு உண்டாகும். வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். முதலீடுகள் செய்வதில் கூடுதல் கவனம் தேவை. வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பயணங்களின்போது கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்: அனுமனை வழிபடுவது நல்லது ஆகும். அரச மரத்தடியில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். மாற்றுத்திறனாளிகளுக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்யலாம். சிவ வழிபாடு சிறப்பை உண்டாக்கும்.
சனி பகவான் சனிப்பெயர்ச்சி காலத்தில் கடும் சவால்களையும், நெருக்கடிகளையும், இடர்களையும் அளித்தாலும் நீதி, நேர்மை, ஒழுக்கம், தர்மம் தவறாமல் வாழ்பவர்களுக்கான நற்பயனையும் அளிப்பார் என்பதே ஐதீகம் ஆகும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















