பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
உலகிலேயே உடல் பருமன் பிரச்சினையால் அதிகளவு அவதிப்படும் குழந்தைகள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடம் பிடித்துள்ளது.

உலகம் முழுவதும் இன்று எதிர்கொண்டு வரும் முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்து வருவது உடல் எடை அதிகரிப்பு. மாறி வரும் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் உழைப்பு குறைவு, ஆரோக்கியமற்ற உணவுகள், தூக்கமின்மை உடல் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது.
உடல் பருமனில் இந்தியா 2வது இடம்:
மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவிலே பதின்ம வயதுள்ள சிறுவர்கள், சிறுமியர்கள் பலரும் வயதைக் காட்டிலும் அதிக எடையில் இருக்கின்றனர். உலக உடல் பருமன் அட்லாஸ் அமைப்பினர் மேற்கொண்ட ஆய்வில் உலகிலே உடல் பருமனால் அதிகளவு சிறுவர்கள் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
அதிர்ச்சி ரிப்போர்ட்:
அதாவது, 5 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளில் 15 மில்லியன் பேர் அதாவது 1.5 கோடி குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். 10 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களும், சிறுமிகளும் 26 மில்லியன் அதாவது 2.6 கோடி பேர் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த ஆய்வறிக்கை மருத்துவர்களையும், சமூக ஆர்வலர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
உலகில் 200 மில்லியன் அதாவது பள்ளி செல்லும் 20 கோடி குழந்தைகள் (5 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள்) வயதைக் காட்டிலும் அதிக எடை மற்றும் உடல் பருமனால் அவதிப்படுவதும், அவர்கள் அதிகபட்சமாக 10 நாடுகளில் மட்டுமே இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ள நிலையில், சீனா முதலிடத்தில் உள்ளது.
அபாயம்:
சீனாவில் 14 மில்லியன் சிறுவர்கள் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகின்றனர். அந்த நாட்டில் உடல் பருமன் காரணமாக மட்டும் 33 மில்லியன் பேர் அவதிப்படுகின்றனர். அமெரக்காவில் 13 மில்லியன் பேர் உடல் எடை பருமனால் அவதிப்படுகின்றனர்.
இந்த உடல் எடை பருமன் காரணமாக ஏராளமான உடல்நலக்குறைவை குழந்தைகள் எதிர்கொள்கின்றனர். 2040ம் ஆண்டில் இந்தியாவில் அதிக உடல் எடை காரணமாக அதிகளவு உடல்நலக்குறைவை குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் 11 வயது முதல் 17 வயது வரையிலான சிறுவர்கள் இந்தியாவில் உடல் உழைப்பு மிக குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. உலகளவில் பார்க்கும்போது 5ல் ஒரு குழந்தை உடல் பருமன் காரணமாக அவதிப்படுவது தெரிய வருகிறது.
பெற்றோர்கள் கவனத்திற்கு:
இந்த ஆய்வை அடிப்படையாக கொண்டு பெற்றோர்கள் மிகுந்த கவனமாகவும், தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவதுடன், அவர்களை போதுமான விளையாட்டு நடவடிக்கையில் ஈடுபடவும் வைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். குழந்தைகள் மட்டுமின்றி இளைஞர்கள் பலரும் அதிக உடல் எடை காரணமாக அவதிப்படுவது இந்தியாவில் அதிகரித்து வருகிறது.























