![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Crime: கொடூரம்! விழுப்புரத்தில் இளம்பெண் எரித்துக்கொலை - நடந்தது என்ன?
விழுப்புரம் அருகே மலட்டாற்றில் இளம்பெண் எரித்துக்கொலை...போலீசார் தீவிர விசாரணை
![Crime: கொடூரம்! விழுப்புரத்தில் இளம்பெண் எரித்துக்கொலை - நடந்தது என்ன? Young women burnt to death in malattar river near Villupuram Police intensive investigation Crime: கொடூரம்! விழுப்புரத்தில் இளம்பெண் எரித்துக்கொலை - நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/1271f9a8547908409335bb06875d95471710896854527113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் அருகே மலட்டாற்றில் இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டார். அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் எரித்துக்கொலை
விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் பகுதியில் ஓடும் மலட்டாற்றின் கரையில் நேற்று மாலை பெண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் கரிக்கட்டையாகி கிடந்தார். இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, அப்பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அப்பெண்ணை யாரோ எரித்துக்கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
யார் அந்த பெண்?
மேலும் கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து காவணிப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதோடு விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன பெண்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மலட்டாற்றில் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த அப்பெண், கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையை அடுத்த கரும்பூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி மனைவி வசந்தி (வயது 31) என்பது தெரிந்தது. இதை குப்புசாமி உறுதி செய்து போலீசாரிடம் கூறினார்.
போலீசார் விசாரணை
கொலை செய்யப்பட்ட வசந்திக்கு சொந்த ஊர் விழுப்புரம் அருகே வி.அரியலூர் கிராமமாகும். இவருக்கும் கரும்பூரை சேர்ந்த குப்புசாமிக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குப்புசாமி, மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வருவதும், வசந்தி விழுப்புரத்தில் உள்ள ஒரு துணிக்கடை உரிமையாளர் வீட்டில் வீட்டு வேலைகளை செய்து வந்ததும், தினமும் காலையில் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலையிலேயே வீட்டிற்கு வருவது வழக்கம்.
கடந்த 4-ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக கரும்பூரில் இருந்து புறப்பட்ட வசந்தி அன்று இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை குப்புசாமி பலமுறை தொடர்பு கொண்டபோதிலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் வசந்தியை தேடிப்பார்த்தும் அவரை பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில் அதுபற்றி குப்புசாமி, மறுநாள் (5-ந் தேதி) புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் அங்குள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வசந்தியை தேடி வந்த நிலையில் நேற்று விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் மலட்டாற்று பகுதியில் உடல் எரிந்த நிலையில் வசந்தி பிணமாக கிடந்துள்ளார்.
காரணம் என்ன?
மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் வசந்தி எதற்காக காவணிப்பாக்கம் பகுதிக்கு வந்தார், அவரை கொலை செய்தவர்கள் யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விழுப்புரம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே மலட்டாற்றில் பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)