கிரிக்கெட் வீரர் நடராஜன் உருக்கமான பேச்சு! வெற்றி ரகசியம், மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
எளிதில் யாருக்கும் வெற்றி கிடைக்காது எல்லா தடைகளையும் மீறி, தன்னை ஏமாற்றி கொள்ளாமல் உழைத்தேன் , கிரிக்கெட் மேல வைத்த நம்பிக்கை தான் வெற்றியை தந்தது.

விழுப்புரம்: எல்லா துறைகளிலும் வாய்ப்பு உள்ளது அதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்வதில்லை, டிவி முன்பாகவும் செல்போன் முன்பாக நேரத்தை வீணடிப்பதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்
விழுப்புரத்தில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய அணி கிரிக்கெட் வீரர் நடராஜன் விளையாட்டு போட்டியினை பார்வையிட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மேடையில் பேசிய கிரிக்கெட் வீரர் நடராஜன் விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்திற்கானது என்றும் எதை நோக்கி செயல்படுகிறோமோ அதனை நோக்கி பயணிக்க வேண்டும், எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதற்கு கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும் என தெரிவித்தார்.
கடந்து வந்த பாதையை மறக்க கூடாது
சாதரணமான குடும்பத்தில் பிறந்த தன்னால் சாதிக்க முடியும் என்றால் எல்லோரும் சாதிக்க முடியும், கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம், விளையாட்டில் உடல் ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் தான் வெற்றி பெறலாம் என்பது இல்லை எனது அம்மா சாப்பாடு உட்கொண்டு தான் வந்து இருக்கிறேன். தனக்கு அம்மா சாப்பாடு பிடிக்கும் என கூறினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும், என்றும் கஷ்டபடாமல் எதுவும் கிடைக்காது தன்னம்பிக்கை இல்லை என்றால் எதுவும் சாதிக்க முடியாது நல்ல உடை உணவு இல்லாமல் தான் இந்த இடத்திற்கு வந்திருப்பதாகவும், என்றுமே விடாமுயற்சியை விட கூடாது எந்த உயரத்திற்கு சென்றாலும் தன்னடக்கம் வேண்டும் கடந்து வந்த பாதையை மறக்க கூடாது என கூறினார்.
தன்னை ஏமாற்றி கொள்ளாமல் உழைத்தேன்!
சொந்த ஊரில் மைதானம் அமைத்து அதில் இலவசமாக கிரிக்கெட் பயிற்சி அளித்து வருவதாகவும் சிறியதாக வழிகாட்டினால் எதுவும் நடக்கலாம், தோள் கொடுத்து நின்ற நண்பர்களை நன்றாக தான் பார்த்து கொள்ளவதாகவும் கஷ்ட காலங்களில் உதவியவர்களை மறக்கக் கூடாது, விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை பெற்றோர்கள் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பும் நிலை வந்துவிட்டதாகவும், எளிதில் யாருக்கும் வெற்றி கிடைக்காது, எல்லா தடைகளையும் மீறி தன்னை ஏமாற்றி கொள்ளாமல் உழைத்தேன். கிரிக்கெட் மேல வைத்த நம்பிக்கை தான் நான்கு அறுவை சிகிச்சைக்கு பிறகும் கிரிக்கெட் விளையாடி வருவதாக தெரிவித்தார்.
அனைத்து துறைகளிலும் வாய்ப்பு உள்ளது அதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்வதில்லை, டிவி முன்பாகவும் செல்போன் முன்பாக நேரத்தை வீணடிப்பதாகவும், உடல் ஆரோக்கியத்திற்கான காய்கறிகள் அதிகமாக விழுப்புரம் மாவட்டத்தில் கிடைக்கிறது அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கனும் எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டுமென கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.





















