ஆணவக்கொலைக்கு ENDCARD! சட்டம் கொண்டு வரும் கர்நாடகா தமிழ்நாட்டில் எப்போது?
ஆணவக்கொலைகளைத் தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், கர்நாடாக அரசு கடும் தண்டனைகளுடன் கூடிய ஆணவக்கொலை தடுப்பு சட்டதுக்கான மசோதாவைத் தயாரித்து அதிரடி காட்டியிருக்கிறது.
இப்போலாம் யார்ங்க சாதி பாக்றாங்க என்று அறியாமையில் பலர் உளறிக்கொண்டிருக்கின்ற இதே காலகட்டத்தில்தான், National Crime Records Bureau தரவுகளின்படி நாட்டில் ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு தலித் மீது சாதிய ரீதியிலான குற்றங்கள் நடக்கிறன.
ஒவ்வொரு நாளும் 27 தலித்துகள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. தினமும் குறைந்தது 10 தலித் பெண்கள் பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தலித்துகள் மீதான வன்முறை வழக்குகள் மட்டும் 45,000-க்குள் மேல் பதிவாகின்றன. இத்தனைக்கும், SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருந்தும் இவ்வளவு சாதிய வன்முறைகள் நிகழ்கின்றன.
இவையனைத்திற்கும் மேலாக, நாடு சுதந்திரமடைந்து முக்கால் நூற்றாண்டு ஆன பிறகும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து வாழ முடியாத அளவுக்கு நாடு முழுவதிலும் ஆணவக் கொலைகள் நிகழ்கின்றன.
படித்தவர், படிக்காதவர், வசதி படைத்தவர், ஏழை என்ற பேதமின்றி சாதி என்ற ஒற்றைப் புள்ளியில் இத்தகைய ஆணவக் கொலைகள் நிகழ்கின்றன. இதில் பாதிக்கப்படுபவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் என்று எளிதில் கடந்துவிட முடியாது. எதிர்தரப்பிலும் உயிரிழப்பு ஏற்படுகிறது. அதனால், பாதிக்கப்படும் இரத்தரப்புக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்படுகிறது.
இதில் தமிழ்நாட்டில் பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னர், தூர வெளிச்சமாக ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து பரிந்துரை வழங்க முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் கடந்த ஆண்டு ஆணையம் அமைத்தார் ஸ்டாலின்.
இந்த நிலையில், பக்கத்து மாநிலமான கார்நாடகாவில் ஆணவக் கொலை தடுப்பு மசோதவை தயாரித்திருக்கிறது காங்கிரஸ் அரசு. கடந்த டிசம்பர் 21-ம் தேதி ஹூப்ளி தாலுகாவில், 20 வயது பெண்ணை அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, பட்டியலின இளைஞரை அவர் திருமணம் செய்தார் என்ற ஒரே காரணத்துக்காக கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்தனர்.
இச்சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதையடுத்து, 'The Karnataka Freedom of Choice in Marriage and Prevention and Prohibition of Crimes in the Name of Honour and Tradition Bill, 2026' என்ற மசோதாவை அரசு தயாரித்திருக்கிறது. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த மசோதாவானது, 18 வயது நிரம்பிய பெண்ணும், 21 வயது நிரம்பிய ஆணும் திருமணம் செய்துகொள்ள குடும்பத்தினர் அல்லது சமூகத்தின் ஒப்புதல் அவசியமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
மேலும், ஆணும் பெண்ணும் கலப்புத் திருமணம் செய்கிறார்கள் எனில் தங்களின் முடிவு பற்றி மாவட்ட நீதிபதி அல்லது நோடல் அதிகாரியிடம் தெரிவிக்க அனுமதிக்கிறது. இருப்பினும் அவர்களின் விருப்பதற்குரியதுதான். அதேசமயம், சம்பந்தப்பட்ட இருவரின் குடும்பத்தினர் அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வேண்டுகோளின் பேரில் போலீஸ் அதிகாரிகள் வேறு அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கை எடுப்பதை இது உறுதிப்படுத்துகிறது.
மேலும், கலப்பு திருமணம் செய்துகொள்ள விருப்பும் ஜோடி, தங்களின் குடும்பத்தினாரால் அல்லது சமூகத்தினரால் அச்சுறுத்தல் அல்லது பாதிப்பு வரக்கூடும் என்று பாதுகாப்பு கேட்டு கோரிக்கை வைத்தால், அடுத்த 6 மணிநேரத்திற்குள் சம்பத்தப்பட்ட ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடத்தையும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த மசோதாவில் தண்டனைகளைப் பொறுத்தவரை, குடும்ப மற்றும் சாதி கௌரவம் என்ற பெயரில் ஜோடியின் மீது கடுமையான தாக்குதல் ஏற்படுத்தினால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். கூடுதலாக, 3 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
லேசான காயம் ஏற்பாடுத்தினால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆணவக்கொலை செய்தால், BNS சட்டத்தின் கீழ் தண்டனைகளுடன் கூடுதலாக குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கப்படும்.
உடல் ரீதியிலான தாக்குதல் மட்டுமல்லாது, சமூக ரீதியாக ஒதுக்கி வைப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டால் 2 முதல் 5 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இதுமட்டுமல்லாது, திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணுடன் உடலுறவு கொண்ட பின்னர் சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்தால் அது குற்றமாகக் கருதப்படும். இச்செயலுக்கு பாலியல் வன்கொடுமை தண்டனைக்கு உட்பட்டு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்படும். கூடுதலாக அபராதமும் விதிக்கப்படும்.
கர்நாடக அரசின் இந்த மசோதா ஆணவக்கொலை தடுக்க முக்கிய முன்னெடுப்பாக பார்ப்பதுடன் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த மசோதா சட்டமானால், நீண்ட காலமாக ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் கோரிக்கை இருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சட்டம் கொண்டுவருவதாற்கான அழுத்தம் ஏற்படும்.





















