DMK KATPADI CANDIDATE : துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
DMK KATPADI CANDIDATE: தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வயது மூப்பு காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லையென தகவல் வெளியாகியுள்ளது. அப்படி அவர் தேர்தலில் இருந்து விலகும்பட்சத்தில் யாருக்கு வாய்ப்புள்ளது.? என்பதை தற்போது பார்க்கலாம்.

நெருங்கும் தேர்தல்- வேட்பாளர் யார்.?
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அதிலும் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என திட்டத்தோடு களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் மக்களை கவரும் வகையில் அதிரடியாக 5ஆயிரம் ரூபாயை மகளிர் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து அசத்தியது. அடுத்ததாக மாணவர்களுக்கு இலவச லேப்டாப், பெண்களுக்கான நலத்திட்டங்கள், மகளிர் உரிமை தொகை 2ஆயிரமாக உயர்த்தப்படும் என அசத்தலான அறிவிப்பையும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுகவில் மூத்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா.?
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் திமுக சார்பாக களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ரகசிய சர்வேக்களையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போதைய எம்எல்ஏக்களுக்கு தொகுதியில் செல்வாக்கு உள்ளதா.? மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவார்களா.? என விசாரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பல தொகுதிகளில் சீனியர்களுக்கு பதிலாக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி மூத்த திமுக தலைவரான பொன்முடிக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லையெனவும் அவருக்கு பதிலாக அவரது மகன் கவுதம சிகாமணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

காட்பாடியில் துரைமுருகன்
அந்த வகையில் திமுக பொதுச்செயலாளராக இருப்பவர் துரைமுருகன் 1971 ஆம் ஆண்டு முதல் காட்பாடி தொகுதியில் பெரும்பாலான தேர்தல்களில் வெற்றி பெற்று, 8 முறைக்கு மேல் இத்தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராமுவை 746 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார். தற்போது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டதால் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கூட கலந்து கொள்ள முடியவில்லை. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

காட்பாடியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்.?
எனவே துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தற்போது மக்களவை எம்பியாக இருப்பதால் அவர் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கமாட்டார் என கூறப்படுகிறது. எனவே காட்பாடி தொகுதியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் காட்பாடி தொகுதியில் யாருக்கெல்லாம் வாய்ப்புள்ளது என திமுக எடுத்துள்ள சர்வேயில் வேலூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோ.முரளிபாஸ்கர் பெயரும் காட்பாடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காட்பாடி தொகுதி மக்களிடம் மட்டுமில்லாமல் இளைஞர்களிடமும் நன்கு அறிமுகமான நபராக முரளி பாஸ்கர் உள்ளார். இளைஞரனிக்கு திமுக தலைமை முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் முரளி பாஸ்கரின் பெயர் திமுகவின் காட்பாடி வேட்பாளர் பட்டியலில் முன்னிலையில் உள்ளது.
அடுத்தாக காட்பாடி பகுதி செயலாளராக உள்ள வன்னியராஜா பெயர் அடிபடுகிறது. எனவே துரைமுருகன் சட்டமன்ற தேர்தல் போட்டியில் இருந்து விலகும் பட்சத்தில் இந்த இரண்டு பேருக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.























