Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் செல்லும் நிலையில் நேற்று மதுரவாயல் தொகுதியில் மக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது திமுகவுக்கு சவால் விடுக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை பூஜ்ஜிய கூட்டணி என விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
இபிஎஸ் சூறாவளி சுற்றுப்பயணம்
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்னும் 2 மாத காலம் மட்டுமே உள்ளது. மே மாதத்தில் தேர்தல் நடைபெறுவதாக சொல்லப்படும் நிலையில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருக்கிறது.
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் செல்லும் நிலையில் நேற்று மதுரவாயல் தொகுதியில் மக்களை சந்தித்து உரையாற்றினார்.
திமுகவுக்கு தேர்தல் தோல்வி பயம்
அப்போது, “தேர்தல் தோல்வி பயம் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே ரூ.5,000 நிதியுதவியை அறிவித்துள்ளார். இந்த திட்டம் சூப்பர் ஹிட் கிடையாது. நான் அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு கருணைத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதியே சூப்பர் ஹிட் ஆகும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய இபிஎஸ், திமுக ஆட்சியில் பல திட்டங்கள் காகிதத்தில் மட்டுமே அறிவிப்புகளாக இருந்தது. அவை செயல்படுத்தப்படவில்லை.திட்டங்களை செயல்படுத்தாமல் பெயரிட்டதற்காக மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என தெரிவித்தார்.
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின், வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டிற்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையிலான தேர்தல் என குறிப்பிட்டு வருகிறார். இதனைப் பற்றி பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தல் மாநில சட்டமன்றத்திற்குட்பட்டது. தேசிய அளவிலான போட்டி கிடையாது என தெரிவித்தார்.
மேலும் திமுக ஆட்சியின் கீழ் தமிழ்நாடு போராட்டங்களின் மையமாக மாறிவிட்டது. ஆளும் கட்சி உயிர்வாழ்வதற்காக கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்துள்ளது. அந்த கட்சியின் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் திமுக தலைமைக்கு அடிமைகள் போல செயல்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கடன் வாங்குவதில் மட்டுமே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக மாறியுள்ளது என்றும், திமுக அரசின் கீழ் நடந்த ஊழல் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
திமுகவை தோற்கடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதிமுக கூட்டணி இணைந்துள்ளது. நிச்சயம் திமுக ஆட்சியை அகற்ற மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அதிமுக தலைமையிலான கூட்டணியை பூஜ்ஜிய கூட்டணி என சொல்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தான் ஜீரோவாக மாறும் எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.




















