Chennai Metro Free Travel: சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்.! சூப்பர் அறிவிப்பு- யாருக்கெல்லாம் தெரியுமா.?
Chennai Metro Free Travel: சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களை இணைக்கும் மெட்ரோ ரயில் சேவையானது இன்று நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இலவசமாக பயணிப்பதற்கான வாய்ப்பையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் சேவை பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பது மட்டுமில்லாம் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிப்பது தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து, (பிப்ரவரி 26, 2026) இன்று சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ICC ஆண்கள் T20 உலகக்கோப்பை 2026-ன் சூப்பர் 8 ஆட்டத்தில் இந்தியா Vs ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டியைப் பார்வையிட வருபவர்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காக மெட்ரோ இரயில் சேவையை நீட்டித்துள்ளது.
சென்னையில் கிரிக்கெட் போட்டி- மெட்ரோ இலவச பயணம்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மெட்ரோ பயணங்களை ஸ்பான்சர் செய்கிறது. எனவே கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை பயன்படுத்தி போட்டி நடைபெறும் நாளில் பயணிகள் எந்த மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு இடையிலான சுற்று பயணத்தினை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
எனவே கிரிக்கெட் போட்டிக்கான டிஜிட்டல் நுழைவு பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான OR குறியீடுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம் என கூறியுள்ளது. எனவே கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் ( பிப்ரவரி 26, 2026) இன்று ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுளது.
மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
- அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am-27.02.2026).
- வழித்தடம் 1-ல் (நீலவழித்தடம்) விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am-27.02.2026),
- சிறப்பு மெட்ரோ இரயில் சேவை நடைபெறும் காலத்தில் (அதாவது இரவு 11:00 மணிக்குப் பின்பு). வழித்தடம் 2-ல் (பச்சை வழித்தடம்) உள்ள மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் மட்டுமே மாறி செல்ல இயலும்.
எனவே பயணிகள் கடைசி இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மெட்ரோ இரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்பே, பயணிகள் தங்களது பயணச்சீட்டுகளை (Tickets) அந்தந்த மொபைல் செயலி அல்லது இணையதளம் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.























