பெண்களோ.. திருநங்கைகளோ.. நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்..
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகளைத் தொழில் தொடங்க ஊக்குவிப்பதுடன், நிதி, தொழில்நுட்ப உதவிகளையும் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன், தமிழ்நாடு அரசு ஒரு மகத்தான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' (Tamil Nadu Women Entrepreneur Development Programme) என்ற பெயரிலான இத்திட்டம், பெண்கள் மற்றும் திருநங்கைகளைத் தொழில் தொடங்க ஊக்குவிப்பதுடன், நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறது.
கடனுதவி மற்றும் மானியம் விவரம்
இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க முன்வரும் தகுதியானவர்களுக்கு, ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடனுதவி வழங்கப்படும். இதில், கடனுதவியின் தொகையில் 25 சதவீதம் வரை மானியமாக அரசு வழங்குகிறது. அதிகபட்சமாக, இந்த மானியத் தொகை ரூ.2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடன் உதவி மட்டுமின்றி, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள், சந்தைப்படுத்துதல் உத்திகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் வயது வரம்பும்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, பெண்கள் மற்றும் திருநங்கைகள் மட்டுமே தகுதியானவர்கள் ஆவார்கள்.
குறைந்தபட்ச வயது: 18 வயது,
அதிகபட்ச வயது: 55 வயது
இந்த வயது வரம்பிற்குட்பட்ட ஆர்வமுள்ள பெண்கள் மற்றும் திருநங்கைகள் இத்திட்டத்தில் இணைந்து, தங்களுக்குச் சொந்தமான சிறு மற்றும் குறுந்தொழில்களைத் தொடங்கலாம்.
முன்னுரிமை அளிக்கப்படும் தொழில்கள்
சமூகப் பொறுப்புணர்வு மற்றும் சந்தைத் தேவையின் அடிப்படையில், கீழ்க்காணும் தொழில்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது
* சுற்றுச்சூழல் சார்ந்த தயாரிப்புகள்: மக்கும் பொருட்கள் தயாரிப்பு, தென்னை நார் மூலம் தயாரிக்கப்படும் செடி வளர்க்கும் தொட்டிகள்.
* புதுமையான தயாரிப்புகள்: விவசாய உற்பத்தி கழிவுகளில் இருந்து பொருட்கள் தயாரித்தல், காகிதக் கழிவுகளிலிருந்து பென்சில் தயாரித்தல்.
* ஆடை மற்றும் அலங்காரம்: ஆடை வடிவமைப்பு, அலங்கார அணிகலன்கள் தயாரிப்பு, கண்ணாடி ஓவியம், பட்டு நூல் அணிகலன் தயாரிப்பு, மணப்பெண் அலங்கார நிலையம், மெகந்தி மற்றும் டாட்டூ நிலையம்.
* உணவு மற்றும் ஆரோக்கியம்: வீட்டில் தயார் செய்யும் உணவுப் பொருட்கள், சத்து மாவு உருண்டைகள் மற்றும் பேக்கரிப் பொருட்கள் தயாரிப்பு, தானிய வகைகளில் தயார் செய்யும் ஐஸ்கிரீம்.
* சேவைத் தொழில்கள்: குழந்தைகள் பராமரிப்பு நிலையம், யோக நிலையம், வளர்ப்புப் பிராணி பராமரிப்பு நிலையம், உடற்பயிற்சி நிலையம், சலவை நிலையங்கள்.
* ஆயுர்வேதப் பொருட்கள்: எலுமிச்சை எண்ணெய் தயாரிப்பு, வெட்டி வேர் எண்ணெய் தயாரிப்பு.
இத்தகைய தொழில்கள் மூலம் பெண்கள் சுயசார்பு அடைவதுடன், பலருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்கள், பின்வரும் ஆவணங்களுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
* தேவையான ஆவணங்கள்: புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் தொழில் தொடங்குவதற்கான விலைப்புள்ளிப் பட்டியல் (Quotation).
* விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.msmeonline.tn.gov.in
மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தகுதியுடைய பெண்கள் மற்றும் திருநங்கைகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மயிலாடுதுறை அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம், கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பெண் தொழில்முனைவோரின் கனவுகளை நனவாக்கி, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















