அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி சுந்தரேசன் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு நீலகிரி டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ளார்.

மயிலாடுதுறை: காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் மீது பகிரங்கமாகப் புகார்களை அடுக்கி, தமிழகக் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) முன்னாள் துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) சுந்தரேசன், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்த தமிழக அரசு, அவரை நீலகிரி மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சையும் அதிரடிப் பணிநீக்கமும்
இந்த விவகாரத்தின் பின்னணி கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்குகியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பணியாற்றி வந்த டி.எஸ்.பி சுந்தரேசன், ஜூலை 17-ஆம் தேதியன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அரசுப் பணியில் இருக்கும் அதிகாரிகள் ஊடகங்களிடம் பேசுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், அவர் காவல்துறைத் தலைமையகம் மற்றும் சக உயர்மட்ட அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான ஊழல் மற்றும் நிர்வாக ரீதியிலான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஒரு சீருடைப் பணியாளர், துறை ரீதியான குறைகளை மேலதிகாரிகளிடம் முறையிடாமல், பொதுவெளியில் அரசுக்கு எதிராகப் பேசியது "கடுமையான ஒழுங்கீனம்" மற்றும் "அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறிய செயல்" எனத் துறை ரீதியாகக் கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உள்துறை (காவல்) துறையின் G.O.(2D) No.219 அரசாணையின்படி, 2025 ஜூலை 19-ஆம் தேதி அவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தின் தலையீடு
தனது பணியிடை நீக்கத்தை எதிர்த்து சுந்தரேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஒரு அதிகாரியை நீண்ட காலம் பணியிடை நீக்கத்திலேயே வைத்திருப்பது முறையல்ல" என்று குறிப்பிட்டனர். செப்டம்பர் 23, 2025 அன்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அரசு ஊழியர்களின் பணிநீக்கக் காலத்தை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்கிற அரசின் வழிகாட்டுதல்களை (G.O. Ms. No.81) முறையாகப் பின்பற்றி, அவரது கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) உத்தரவிட்டது.
விசாரணையும் புதிய அரசாணையும்
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சுந்தரேசன் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் 17(b) பிரிவின் கீழ் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான குற்றச்சாட்டு குறிப்பாணை கடந்த நவம்பர் 14, 2025 அன்று வழங்கப்பட்டு, விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.
துறை ரீதியான விசாரணைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்த நிலையில், நீதிமன்றத்தின் கண்டிப்பு மற்றும் டி.ஜி.பி-யின் பரிந்துரையை ஏற்று, தமிழக அரசு கடந்த பிப்ரவரி 2, 2026 அன்று புதிய அரசாணையை (G.O. 48) வெளியிட்டது. கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பெயரில் வெளியான இந்த உத்தரவில், சுந்தரேசன் மீதான பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நீலகிரிக்கு மாற்றம்
செய்யப்பட்டாலும், சுந்தரேசனுக்கு ஒரு சில முக்கிய நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது, அவரை எக்காரணம் கொண்டும் "முக்கியத்துவம் வாய்ந்த" (Sensitive) பணியிடங்களில் அமர்த்தக் கூடாது. அவர் ஏற்கனவே பணியாற்றிய மண்டலத்திற்கு (Zone) வெளியே, தொலைதூரமான ஒரு பகுதியில் பணி வழங்கப்பட வேண்டும்.
இந்த நிபந்தனைகளின் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்டக் காவல் அலுவலகம் பிப்ரவரி 3, 2026 அன்று ஒரு குறிப்பாணையை வெளியிட்டு, அவரிடம் ஒப்புதல் பெற்றுத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியது.
நீலகிரியில் புதிய பொறுப்பு
நீண்ட இழுபறிக்குப் பிறகு, தற்போது டி.எஸ்.பி சுந்தரேசன் நீலகிரி மாவட்ட துணைக்காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறையில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை மாவட்டத்திற்கு அவர் மாற்றப்பட்டிருப்பது, அரசின் "நிபந்தனை" அடிப்படையிலான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இருப்பினும், உயர்மட்ட அதிகாரிகளை எதிர்த்த ஒரு அதிகாரி மீண்டும் பணியில் சேர்ந்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. சுந்தரேசன் மீதான 17(b) விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அதன் முடிவுகளைப் பொறுத்தே அவரது எதிர்காலப் பணி உயர்வு மற்றும் இதர பலன்கள் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
























