காசிக்கு இணையான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திரப் பெருவிழா: மார்ச் 8-ல் தேரோட்டம்!
மயிலாடுதுறை அருகே புதன் ஸ்தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 2026-ஆம் ஆண்டு இந்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

திருவெண்காடு: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருவெண்காடு கிராமத்தில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. நவகிரகங்களில் கல்வி, அறிவு மற்றும் வணிகத்திற்கு அதிபதியான புதன் பகவானுக்குரிய தனிச்சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகத் திகழும் இக்கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் "இந்திரப் பெருவிழா" உலகப் புகழ்பெற்றது. இத்தகைய மகத்துவம் வாய்ந்த இவ்வாண்டின் இந்திரப் பெருவிழா, பிப்ரவரி 28-ஆம் தேதி இரவு மங்கல இசை முழங்க, வேத விற்பன்னர்களின் மந்திரங்கள் ஒலிக்க, மிக விமர்சையாகக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து உருவான அகோர மூர்த்தியின் அருளாட்சி நடைபெறும் இத்தலத்தில், கொடியேற்ற நிகழ்வைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மிகவும் பிரமிக்கத்தக்க இத்திருக்கோயிலின் தல வரலாறு
காசிக்கு இணையான ஆறு சிவத்தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் திருவெண்காடு, "மூர்த்திகளால் மூவர், தீர்த்தங்களால் மூன்று, தல விருட்சங்களால் மூன்று" என மூன்றின் சங்கமமாக விளங்குகிறது. இங்கு சுவேதாரண்யேஸ்வரர், அகோரமூர்த்தி மற்றும் நடராஜர் என மூன்று மூர்த்திகளும், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் என மூன்று புனிதக் குளங்களும். வில்வம், கொன்றை மற்றும் வன்னி என மூன்று தல விருட்சங்களும் அமையப் பெற்றுள்ளன.
மருத்துவாசுரன் வரலாறு
குறிப்பாக, மருத்துவாசுரன் எனும் அரக்கன் தேவர்களைத் துன்புறுத்தியபோது, அவர்களைக் காக்க சிவபெருமான் தனது ஈசான முகம் உள்ளிட்ட ஐந்து முகங்களுடன், நெற்றிக்கண்ணிலிருந்து சினத்துடன் தோன்றி "அகோரமூர்த்தி"யாக அவதரித்து அரக்கனைச் சம்ஹாரம் செய்த தலம் இதுவாகும். இத்தகைய வீரம் செறிந்த வரலாற்றைக் கொண்ட இத்தலத்தில், புகழ்பெற்ற துறவி பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்று ஞானம் அடைந்தார் என்பதும், சைவ சித்தாந்தத்தின் ஆணிவேரான "சிவஞான போதத்தை" உலகிற்கு அருளிய மெய்கண்டார் அவதரித்த தலம் இது என்பதும் இதன் கூடுதல் சிறப்பாகும்.
நேற்று இரவு நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வின் போது, உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் மற்றும் அம்பாள் சமேத சுவேதாரண்யேஸ்வரர் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் எழுந்தருளி கொடிமரம் அருகே காட்சியளித்தனர். பின்னர், கொடிமரத்திற்குப் பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. நந்தி உருவம் பொறிக்கப் பெற்ற புனிதமான கொடிக்குத் தீபாராதனை காட்டப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் அதிர கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்று எழுப்பிய பக்தி முழக்கம் விண்ணைத் தொட்டது. இந்த 13 நாள் திருவிழாவின் போது சுவாமி நாள்தோறும் மயில், பூதம், ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளிக்க உள்ளார்.
இந்திரப் பெருவிழாவின் முக்கியத் திருவிழாவாக வரும் மார்ச் 4-ஆம் தேதி "அகோர மூர்த்தி" லட்சார்ச்சனை பூஜையும், அன்று மாலை மிகவும் பிரசித்தி பெற்ற "சகோபரம்" எனப்படும் தெருவடைச்சான் வீதியுலாவும் நடைபெறவுள்ளது. இந்தத் தெருவடைச்சான் வீதியுலா என்பது மாடவீதிகளின் அகலத்தையே அடைத்துக்கொண்டு வரும் பிரம்மாண்டமான தேர் போன்ற அமைப்பாகும், இதைக் காண்பதற்குப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். அதனைத் தொடர்ந்து, மார்ச் 6-ஆம் தேதி சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவமும், மார்ச் 8-ஆம் தேதி விழாவின் உச்ச நிகழ்வான மகா தேரோட்டமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் இறுதி நிகழ்வாக மார்ச் 11-ஆம் தேதி சந்திர தீர்த்தத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கண்கவர் தெப்ப உற்சவமும் நடைபெற்று விழா நிறைவு பெறும். விழா ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகத்தினர், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
























