பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
பொன்முடி எம்.எல்.ஏ. மீதான செம்மண் குவாரி வழக்கில் அடுத்த மாதம் 2-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுமென விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது

விழுப்புரம் : பொன்முடி எம்.எல்.ஏ. மீதான செம்மண் குவாரி வழக்கில் அடுத்த மாதம் 2-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுமென விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
செம்மண் குவாரி வழக்கு
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டது.
இதன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
57 சாட்சிகளின் விசாரணை நிறைவு
இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்தது. இதில் மொத்தம் சேர்க்கப்பட்ட 57 சாட்சிகளில் 33 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜமகேந்திரன், சதானந்தம், கோபிநாதன் ஆகிய 3 பேர் மட்டும் நேரில் ஆஜராகினர். பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி, பொன்முடி எம்.எல்.ஏ. உள்பட 4 பேரும் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் தரப்பில் சில சாட்சிகளை விசாரிக்க வேண்டுமென அனுமதி கேட்டதன் அடிப்படையில் 4 சாட்சிகள் விசாரித்து முடிக்கப்பட்டனர்.
வாதம்
இவ்வழக்கு விசாரணைக்காக அரசு தரப்பில் 182 ஆவணங்களும், 1 சான்றுப்பொருளும் தாக்கல் செய்யப்பட்டது. அதுபோல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பல் 26 ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் ஏற்கனவே வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி, சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து வாதிட்ட நிலையில் அதற்கு பொன்முடி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 7 பேரின் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி பதில் வாதம் செய்து முடித்தனர். இதையடுத்து நேற்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் செய்து முடித்த வாதத்திற்கு அரசு தரப்பு வக்கீல் கார்த்திகேயன் பதில் வாதம் செய்தார்.
அடுத்த மாதம் 2-ந் தேதி இறுதி தீர்ப்பு
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மணிமொழி, இதன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதிக்கு ஒத்திவைத்ததுடன் அன்றைய தினம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்தார். கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தி.மு.க. கட்சியினர் மற்றும் அரசியல் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.























