டி 23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டம் ; கும்கி யானை வரவழைப்பு..!
கும்கி யானைகள் மீது அமர்ந்தவாறு அடர்ந்த புதருக்குள் சென்று தேட, கும்கி யானைகளை வரவழைக்க முடிவு செய்தனர். இதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சீனிவாசன் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மனித - வனவிலங்கு மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளில் யானை மற்றும் புலிகளின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. உடலில் ஏற்பட்டுள்ள காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபர் புலி தாக்கியதில் உயிரிழந்தார்.

புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். புலியை பிடிக்கக் கோரி உள்ளூர் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வார காலமாக தேவன் எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிந்த டி 23 புலி, சிங்காரா பகுதிக்கு இடம் பெயர்ந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப் பகுதியில் குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றது. இதில் அவரது தலை பகுதியை தின்ற புலி வனத் துறையிடம் இருந்து தப்பியது.

மசினகுடி பகுதியில் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலையில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனிடையே ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார். புலியை சுட்டுக் கொல்ல எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் பலர் கருத்திட்டு வருகின்றனர். மேலும் சுட்டுக் கொல்ல எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் உள்ளூர் மக்கள் புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுமார் 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் அதி விரைவுப்படையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புலி நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து வனத்துறையினர் பிடியில் அகப்படமால் புலி சுற்றி வருகிறது. ஒன்பதாவது நாளாக வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மயக்க ஊசி மற்றும் துப்பாக்கியுடன் வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். புலி நடமாட்டம் காரணமாக சிங்காரா, மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் இன்று மசினகுடியில் தேடுதல் பணி நடைபெறும் இடத்திற்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து புலியை கண்டு பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டு வருவதால், இன்று 10 குழுக்களாக தேடும் பணி அதிகரித்து உள்ளதாகவும், 3 ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கபட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் புலியை சுட்டு கொல்லாமல் உயிருடன் மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பது தான் தாங்களது நோக்கம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே முதுமலையில் உள்ள அதவை என்ற மோப்பநாய் தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலும் 2 மோப்ப நாய்கள் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. கும்கி யானைகள் வரவழைத்து அவற்றின் மீது அமர்ந்தவாறு அடர்ந்த புதருக்குள் சென்று தேட கும்கி யானைகள் வரவழைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சீனிவாசன் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ட்ரோன்களை கொண்டு கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
Before You Go
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















