கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: காஞ்சிபுரம் மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பெற்றோர்களே, இதை தவறவிடாதீர்கள்!
"கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்."

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லும் 14 வயதுடைய மாணவியர்க்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் தி.சினேகா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
இந்தியாவில் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்கலில் மார்பக புற்றுநோயை அடுத்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் 2 வது இடத்தில் உள்ளது. இந்த நோய் மனித பாபிலோமா வைரஸ் எனும் நுண்கிருமியின் வாயிலாக ஏற்படக்கூடியது. இது தடுப்பூசி மூலம் தவிர்க்கப்படக்கடிய, தடுத்துக் கொள்ளக்கூடிய காரணியாகவே உள்ளது. உலக அளவில் 156 நாடுகள் அந்தந்த நாடுகளின் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இத்தடுப்பூசியை பெண்களுக்கு செலுத்தி வருகின்றன.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு செலுத்தும் விதமாக கடந்த 28.2.26 ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 14 வயதுடைய பள்ளிக்குச் செல்லும் மாணவியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடர்ந்து 3 மாதங்களுக்கு நடைபெறவுள்ளது.
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது எப்படி ?
இத்தடுப்பூசியானது 0.5 பம்ப் அளவு தசை வழியே ஊசி மூலமாக ஒரே ஒரு முறை செலுத்திக் கொள்ளும் வகையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் இத்தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்பானது. இத்தடுப்பூசி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பொது மருத்துவமனைகளில் அனைத்து வேலைநாட்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலுத்தப்பட்டு வருகிறது. எனவே 14 வயதுடைய பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது கருப்பையின் கீழ்ப்பகுதியான கருப்பை வாயில் உள்ள செல்கள் அசாதாரணமாக வளர்ச்சியடைவதால் ஏற்படும் ஒரு பாதிப்பாகும். இதற்கு HPV (Human Papillomavirus) எனப்படும் வைரஸ் தொற்று மிக முக்கிய காரணமாக அமைகிறது.
ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறியும் தெரியாது என்றாலும், நோய் தீவிரமடையும் போது வழக்கத்திற்கு மாறான இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் மற்றும் இடுப்பு வலி போன்றவை ஏற்படலாம். இதைத் தவிர்க்க HPV தடுப்பூசி போட்டுக்கொள்வதும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அவ்வப்போது பாப் ஸ்மியர் (Pap Smear) போன்ற பரிசோதனைகளைச் செய்துகொள்வதும் அவசியம். சரியான நேரத்தில் கண்டறிந்தால், இந்த புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )























