![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
DGP Sylendra Babu warns: தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்..! தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை - எச்சரிக்கை விடுத்த தமிழக டி.ஜி.பி..!
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்
![DGP Sylendra Babu warns: தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்..! தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை - எச்சரிக்கை விடுத்த தமிழக டி.ஜி.பி..! Coimbatore petrol bomb attack on bjp members DGP warns DGP Sylendra Babu warns: தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்..! தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை - எச்சரிக்கை விடுத்த தமிழக டி.ஜி.பி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/25/4232c4409320e7951418224a9f7412451664083449258175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாஜகவினரின் இடங்களில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுவோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை உள்ளிட்ட இடங்களில் பாஜக, இந்து அமைப்பினர் உள்ளிட்டவர்களின் இடங்களில் பொட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கோவை விரைகிறார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக டிஜிபி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் இச்சோதனையின்போது 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்து 410 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தஞ்சாவூரில் பஸ் மீது கல்வீசி சேதம் விளைவித்த அரித்திரி, சலீம், சிராஜீதின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்ய தனிப்படைகள்:
அதனைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள் வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை குறிவைத்து வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இது வரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நூறு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களது இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யட்டுள்ளன.
கூடுதல் காவல்துறையினர்:
கோவை மாநகரில் RAF இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படை இரண்டு பிரிவுகள். சிறப்பு அதிரடிப்படை இரண்டு பிரிவுகள் என கூடுதலாக 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர், திரு.பி.தாமரைக்கண்ணன், இகாப, அங்கு முகாமிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Also Read: Crime : மதுரையிலும் பெட்ரோல் குண்டு வீச்சு ! தமிழ்நாட்டில் தொடரும் பதற்றம்..! அச்சத்தில் மக்கள்..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)