கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு... மார்ச் 7-ல் தீர்ப்பு
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும் 7ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், வரும் மார்ச் 7-ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் அறிவித்து உள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த போது அவரை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று, நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண்கள் பாதுகாப்புக்கு திருப்புமுனையா?
இந்த வழக்கில் சதீஷ், கார்த்தி, தவசி ஆகிய மூவரை போலீசார் துடியலூர் அருகே வெள்ளலூர் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் 112 சாட்சிகளில், பாதிக்கப்பட்ட மாணவி, அவரது ஆண் நண்பர் உள்ளிட்ட 78 முக்கியச் சாட்சிகளிடம் நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தியது. தடயவியல் ஆதாரங்கள் மற்றும் செல்போன் சிக்னல்கள் உள்ளிட்ட அறிவியல் ரீதியான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அனைத்துத் தரப்பு வாதங்களும், சாட்சிகள் விசாரணையும் முழுமையாக நிறைவு அடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை மார்ச் 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு கோவை மட்டுமல்லாது தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது























