சகோதரனை இறந்த தருணத்திலும் காமெடி காட்சிகளில் நடித்த ஊர்வசி...நன்றி சொன்ன பாண்டிராஜ்
தனது சகோதரரின் இறப்பின் போதும் நடிகை ஊர்வசி அடுத்த நாளே படப்பிடிப்புக்கு வந்து நடித்து கொடுத்ததாக பரிமளா & கோ இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பரிமளா & கோ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ் நடிகை ஊர்வசி குறித்து சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
பரிமளா & கோ டைட்டில் பற்றி
இயக்குநர் பாண்டிராஜ் பேசியபோது அனைவருக்கும் வணக்கம். “பரிமளா அண்ட் கோ” கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு “பரிமளா ஃபேமிலி” என்ற தலைப்பு வைத்திருந்தோம். பிறகு “டூரிஸ்ட் ஃபேமிலி” போன்ற தலைப்புகள் வந்ததால் மாற்றலாமா என்று யோசித்தோம். “ஸ்வீட் ஹோம்” என்று கூட ஒரு பெயர் வைத்திருந்தோம். இறுதியில் “பரிமளா அண்ட் கோ” என்று வைத்தால் எப்படி இருக்கும் என்று வீட்டில் மனைவி, பிள்ளைகளிடம் கேட்டேன். அவர்கள் இருவரும் இதற்கே ஓட்டு போட்டார்கள். அசிஸ்டண்ட்கள், தயாரிப்பாளர், நண்பர்கள் என எல்லோரிடமும் வாக்கெடுப்பு எடுத்தோம். பெரும்பாலானோர் இதையே தேர்வு செய்தார்கள்.
இந்த கதையை முதலில் தமிழ் குமரன் சாரிடம் சொன்னபோது, அவர் சிரித்த விதமே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. அவர் சாதாரணமாக மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால் கதை கேட்டு மனதார சிரித்தார். அங்கேயே “இந்த படம் கண்டிப்பாக மக்களிடம் வேலை செய்யும்” என்ற நம்பிக்கை வந்தது.
ஜெயராம் சார், ஊர்வசி மேம் இருவரும் இந்த கதைக்குள் வந்ததும், படம் பாதி வெற்றி அடைந்துவிட்டது என்று நினைத்தேன். அவர்கள் இருவரும் கதை கேட்டபோது தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார்கள். ஜெயராம் சார் உடனே “இது கண்டிப்பாக பெரிய ஹிட் ஆகும்” என்றார். அந்த அளவுக்கு அனுபவம் உள்ள இரண்டு கலைஞர்கள் அப்படிச் சொன்னதும் எனக்கு இன்னும் நம்பிக்கை கிடைத்தது. மிஷ்கின் சாரிடம் கதை சொன்னபோதும், அவர் வழக்கம்போல் அமைதியாக இருந்தார். ஆனால் சிரித்துக்கொண்டே கேட்டார். அவர் சிரித்தால் அது ரசிகர்களுக்கும் கனெக்ட் ஆகும் என்று எனக்கு தெரியும். அங்கேயும் ஒரு நம்பிக்கை கிடைத்தது.
சகோதரிகளாக சஞ்சனா மற்றும் அனந்திகா
இந்த கதையில் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் மிகவும் முக்கியமானவை. வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் எப்போதும் சண்டை, சிரிப்பு, கலாட்டா நடந்து கொண்டே இருக்கும் இல்லையா? அந்த உணர்வை கொண்டு வரவே அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் உருவாக்கினோம். அதற்காக சஞ்சனா, அனந்திகா ஆகியோரை தேர்வு செய்தோம். அனந்திகாவின் reels-ஐ பார்த்தவுடனே அந்த energy பிடித்துவிட்டது. சஞ்சனாவிடம் கதை சொன்னபோது, ஆரம்பத்தில் உதவி இயக்குநர் மாதிரி சீரியஸாக கேட்டுக்கொண்டிருந்தார். பிறகு சிரிக்க ஆரம்பித்தார். அப்போதே இந்த படம் ஒர்க் ஆகும் என்று எனக்கு தோன்றியது. அனந்திகா, சஞ்சனா “இவர்கள் உண்மையிலேயே அக்கா–தங்கச்சிகளா?” என்று கேட்டார்கள். அந்த அளவுக்கு இயல்பாக நடித்திருந்தார்கள். உண்மையான அக்கா–தங்கைகள் போலவே செட்டில் எப்போதும் சண்டை, கலாட்டா, அன்பு என இருந்துகொண்டே இருப்பார்கள்.
ஊர்வசி சகோதரனின் இறப்பு
ஜெயராம் சார், ஊர்வசி மேம் இருவருக்கும் நான் மிகவும் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக ஊர்வசி மேம் ஒரு பெரிய personal tragedy நடந்திருக்கும் நேரத்திலும், “ஷூட்டிங்கை நிறுத்த வேண்டாம், நான் வந்து முடித்துவிடுகிறேன்” என்று மறுநாளே வந்து நடித்தார்கள். அது எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். அந்த மனநிலையில் கூட அவர்கள் நகைச்சுவை காட்சிகளை அற்புதமாக செய்தார்கள். இன்று வரை அந்த காட்சிகள் பார்க்கும்போதும் நாங்கள் சிரிக்கிறோம்.
ஒரு இயக்குநருக்கு ஒரு கட்டத்திற்குப் பிறகு படம் போர் அடிக்க ஆரம்பிக்கும். Editing, dubbing, mixing என்று மீண்டும் மீண்டும் பார்த்தால் காமெடி கூட சிரிப்பாக இருக்காது. ஆனால் ஜெயராம் சார் – ஊர்வசி மேம் காம்பினேஷன் மட்டும் கடைசி வரை ஃப்ரெஷ்ஷாக இருந்தது. இந்த படத்தில் என் எனர்ஜிக்கு ஈடு கொடுத்தவர் சாண்டி மாஸ்டர். நான் எவ்வளவு எனர்ஜியாக இருப்பேனோ, அதைவிட அதிகமாக இருப்பார். காலையிலேயே முழு எனர்ஜியுடன் வந்துவிடுவார். அதேபோல் அந்த இரண்டு பெண்களும். எந்த நேரம் சொன்னாலும் “ஓகே சார்” என்று வந்து நிற்பார்கள். இந்த படத்தில் இருந்த ஒவ்வொருவரும் முழு மனதுடன் உழைத்திருக்கிறார்கள்.
கூடவே வரும் மிஷ்கின்
மிஷ்கின் சார் மற்றும் அவருடைய தம்பி இருவரையும் முதன்முறையாக ஒரே படத்தில் நடிக்க வைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். அந்த அண்ணன்–தம்பி பாசம் ரொம்ப அழகாக இருந்தது. செண்ட்ராயன், பூர்ணிமா உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக பூர்ணிமாவை ஒரு நாள் முன்பு தான் அழைத்தோம். உடனே “நான் வருகிறேன்” என்று சொல்லி வந்து நடித்தார். அது எங்களுக்கு பெரிய உதவி.
மிஷ்கின் சாருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. கடந்த சில நாட்களாக promotion-க்காக எல்லா இடங்களுக்கும் என்னுடன் வருகிறார். நான் போகும் இடமெல்லாம் அவர் பின்னாலேயே வருகிறார். “படத்துக்காக வர்றேன்” என்று சொல்வார். அது எனக்கு மிகப்பெரிய அன்பு. ஜெயராம் சாரும் இந்த படத்தை ஒரு பெரிய வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் எப்போதும் படத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். என் முழு குழுவும் அதே உற்சாகத்தோடு வேலை செய்தது. ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் — என் வேகத்துக்கு சரியாக பொருந்திய கேமராமேன். என் படங்களில் மிகவும் தரமான விஷுவல் கொண்ட படமாக இது இருக்கும் என்று நம்புகிறேன். இசையமைப்பாளர் பாக்ஸன் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். திங்க் மியூசிக் சந்தோஷ் மணி அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவரிடம் மிகப்பெரிய எனர்ஜி இருக்கிறது. இன்னொரு அனிருத் மாதிரி ஒரு தனித்துவமான இசையமைப்பாளராக வருவார் என்று நம்புகிறேன்.
இறுதியாக, லைக்கா நிறுவனம் இந்த படத்துடன் இணைந்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. சுபாஸ்கரன் சார் லண்டனில் எங்களுக்கு மிகப்பெரிய விருந்தளித்தார். இந்த படத்தையும் மக்களுக்கு ஒரு பெரிய விருந்தாக கொடுக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கிறது. சுபாஸ்கரன் சாருக்கும் தமிழ் குமரன் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















