தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
காவிரி நீர் விவகாரத்தில் சட்டப்படி தமிழ்நாட்டுக்கு அனைத்து உரிமைகள் இருந்தும், அதையெல்லாம் ஒருநாளும் மதிக்காத கர்நாடகா அரசின் முதல்வரை நேரில் சந்திக்க விஜய் திட்டமிட்ட நிலையில், கர்நாடகாவுக்கு நீங்கள் வரவேண்டாம் என்று டி.கே.சிவகுமார் புறக்கணித்திருப்பதை ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமான அவமானம் என்றும், தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட தலைகுனிவு என்றும் சமூக வலைத்தளங்களில் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை என்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பிரச்னை. இதில், கடைசியாக உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16-ம் தேதி அளித்த தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா அரசு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும். இந்தத் தீர்ப்பின்படி காவிரி நீர் பகிர்ந்துக்களிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், அதனைக் கண்காணிப்பதற்கும் 2018 ஜூன் மாதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு (CWRC) அமைக்கப்பட்டது.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும், தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவிடம் தமிழ்நாடு முறையிடுவதும், அதன்பின்னர் இவ்வளவு தண்ணீர் திறந்துவிடுங்கள் கர்நாடகா அரசுக்கு ஆணையம் உத்தரவிடுவதும், கர்நாடகா அரசு அந்த உத்தரவை மதிக்காமல் எங்களுக்கே தண்ணீர் இல்லை என்று உண்மையான நீர் இருப்பை மறைத்து இவ்வளவு தான் தர முடியும் என்று பெயருக்கு தண்ணீர் திறந்துவிடுவதும் தான் தொடர்ச்சியாக நடந்துவருகிறது.
இப்போதுகூட, ஜூலை 29 முதல் அடுத்த 15 நாள்களுக்கு தமிழகத்திற்கு நாள்தோறும் 3,500 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனாலும் கர்நாடக அரசு வழக்கம்போல எங்களிடமே தண்ணீர் இல்லை எனவே தண்ணீர் திறந்துவிட முடியாது, இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறோம் என்று கூறியிருக்கிறது.
ஆனால் இப்போது இந்தப் பிரச்னையில் தமிழக முதல்வர் விஜய்யின் நகர்வும், அதற்கு கார்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரின் எதிர்வினையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
டி.கே.சிவகுமார் கர்நாடக முதலமைச்சராக கடந்த ஜூன் மாதம் பதவியேற்ற நாள்முதலே, மேகதாதுவில் அணை காட்டியே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார். மேலும், ஜூன், ஜூலை மாதத்துக்கான தண்ணீரும் கர்நாடகா இன்னும் திறந்துவிடவில்லை. இதில், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான கட்சிகள் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என்று வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தன.
ஆனால், முதலமைச்சர் விஜய் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல், அணை கட்ட அனுமதிக்காதீர்கள் என மத்திய அரசுக்கு ஒரு கடிதம் மட்டும் அனுப்பினார். இதற்கு மத்தியில், விஜய் நேரடியாக கர்நாடகா சென்று டி.கே.சிவகுமாரை சந்தித்து மேகதாது அணை பிரச்னை குறித்தும், தண்ணீர் திறந்துவிடுவது குறித்தும் பேச்சுவார்த்தை நாடத்தப்போவதாக தகவல் வெளியானது.
இதனால், திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவின்படியும் தமிழ்நாட்டுக்கு உரிமை இருக்கும்போது, அதனை மதிக்காத கர்நாடகாவுக்கு முதலமைச்சர் சென்று பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது, இதனை சட்ட ரீதியாகவே அணுக வேண்டும், அதை மீறி கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ்நாட்டின் தன்மானத்தை அடகு வைப்பதற்குச் சமம் என்று விஜய்யை எச்சரித்தனர். ஆனால், இந்த எச்சரிக்கைகளுக்கும் விஜய் மௌனமாகவே இருந்தார்.
தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத் ஜூலை 24-ம் தேதி செய்தியாளர்களிடம், காவிரி விவகாரம் தொடர்பாக விஜய் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா சென்று டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசப்போவதாக உளறிக்கொட்டினார். அடுத்தநாளே அமைச்சர் ராஜ்மோகன் பதறியடித்து, முதலமைச்சர் கர்நாடகா செல்வது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று கூறி சமாளித்தார். அதற்கடுத்த நாள் அமைச்சர் வினோத்தும், இதுகுறித்து தலைமை அறிவிக்கும் என்று தனது சொந்தக் கூற்றிலிருந்து பின்வாங்கினார்.
இதற்கிடையே, கர்நாடகாவிலிருந்து விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக இன்னொரு தகவல் பரப்பப்பட்டது. அதேவேளையில், ஜூலை 29-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவக்குமார், "காவிரி நீர் விவகாரத்தில் சில விஷயங்கள் குறித்து என்னிடம் நேரில் பேச தமிழக அரசு தரப்பிலிருந்து என்னிடம் விருப்பம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக தலைமைச் செயலாளரும் எனக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய் என்னிடம் தொலைபேசியில் பேசினார். மேகதாது பகுதி உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்நிலைகளை பார்வையிட முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயாராக இருக்கிறது" என்று வெளிப்படையாகக் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 3-ம் தேதி விஜய் நிச்சயமாக கர்நாடகா செல்வதாகவும், மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில்தான் டி.கே.சிவக்குமார் நேற்று செய்தியளர்களிடம் பேசுகையில், "கர்நாடகாவில் நிலைமை சரியில்லை. இந்த நேரத்தில் விஜய் இங்கு வருவது சரியாக இருக்காது. எனவே கர்நாடகாவுக்கு விஜய் வரவேண்டாம். உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிக்கலாம். இதில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க முடியாது" என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், விஜய் கர்நாடகா செல்கிறார் என்று தகவல் வெளியானபோதும் எதிர்க்கட்சிகள் அதனை எதிர்த்தபோதும் வாய் திறக்காத தவெக அரசு, பின்னர் விஜய் என்னிடம் தொலைபேசியில் பேசினார் என்று டி.கே.சிவகுமாரே வெளிப்படையாகக் கூறியபோதும் வாய்திறக்காத தவெக அரசு, இப்போது கர்நாடகாவுக்கு விஜய் வரவேண்டாம் என்று டி.கே.சிவகுமார் ஊரறிய சொன்னபோதும் தவெக அரசு வாய்திறக்காமல் இருக்கிறது.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டுக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக தவெக அரசின் மீதும், முதலமைச்சர் விஜய் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, பல மாநில முதலமைச்சர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சரின் வருகைக்காக காத்திருந்த நிலைமை மாறி, இப்போது தமிழ்நாட்டு முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லும் அவலத்தை தவெக அரசு உருவாக்கியிருக்கிறது, இது தமிழ்நாட்டின் தன்மானத்தின் மீதான இழுக்கு, தமிழ்நாட்டுக்கு இத்தகைய தலைகுனிவை ஏற்படுத்திவிட்டோமே என்ற சிறு குற்ற உணர்ச்சிகூட இல்லாமல் இப்போதும் வாய்திறக்காமல் இருப்பதுதான் உங்களின் மௌனப் புரட்சியா, எப்போதுதான் வாய் திறப்பீர்கள் என்று தவெக அரசையும், முதலமைச்சர் விஜய்யையும் சமூக வலைத்தளங்களில் பலரும் கட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















