Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026 Date And Time: முருகப்பெருமானுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை நாள் எப்போது? பக்தர்கள் எப்படி விரதம் இருக்க வேண்டும்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் மாதங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களில் ஒன்று ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு பண்டிகையும் மிகவும் சிறப்பு வாய்ந்த பண்டிகை ஆகும். அந்த வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக ஆடிக்கிருத்திகை திகழ்கிறது.
ஆடிக்கிருத்திகை:
ஆடி மாதத்தில் வரும் பண்டிகையில் மிகவும் முக்கியமான விசேஷ நாளாக ஆடிக்கிருத்திகை பண்டிகை உள்ளது. ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதம் என்றாலும், ஆடிக்கிருத்திகை பண்டிகை முருகப்பெருமானுக்கு உகந்த நாள் ஆகும்.
ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா?
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரமே ஆடிக்கிருத்திகை ஆகும். நடப்பாண்டிற்கான கிருத்திகை நட்சத்திரம் நாளை மாலை 6.18 மணிக்குத் தொடங்கி, கிருத்திகை நட்சத்திரம் நாளை மறுநாளான 7ம் தேதி 4.51 மணிக்கு நிறைவடைகிறது.
கிருத்திகை நட்சத்திரம் நாளை மாலை தொடங்குவதில் சில கோயில்களில் நாளையே ஆடிக்கிருத்திகை கொண்டாடப்படுகிறது. சில கோயில்களில் நாளை மறுநாளான 7ம் தேதி ஆடிக்கிருத்திகை கொண்டாடப்படுகிறது.
பொதுவாக, ஒருநாளின் சூரிய உதயத்தின்போது என்ன நட்சத்திரம் இருக்கிறதோ? அதுவே அந்த நாள் முழுவதும் கணக்கில் கொள்ளப்படும். அந்த கணக்கீட்டின்படி நாளை மறுநாள் சூரிய உதயத்தின்போதுதான் கிருத்திகை நட்சத்திரம் இருக்கும்.
கிருத்திகை விரதம் எப்போது?
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் இருந்து மனமுருகி வேண்டிக்கொண்டால் நமது வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். கிருத்திகை விரதம் பொதுவாக பரணி, கிருத்திகை இரண்டு நட்சத்திரங்களும் சேரும் நாளிலே விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது.
இதன்படி பார்த்தால் நாளை சில பக்தர்கள் கிருத்திகை விரதம் இருப்பார்கள். நாளை மறுநாள் சில பக்தர்கள் கிருத்திகை விரதம் இருப்பார்கள். திருத்தணி உள்ளிட்ட பெரும்பாலான முருகன் கோயில்களில் நாளை ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. சில முருகன் கோயில்களில் நாளை மறுநாள் ஆடிக்கிருத்திகை கொண்டாடப்படுகிறது.
களைகட்டும் முருகன் கோயில்கள்:
பொதுவாக முருகன் கோயில் எப்போதும் களை கட்டி காணப்படும். ஆடிக்கிருத்திகை என்றால் முருகன் கோயில்களில் பக்தர்கள் பன்மடங்கு அதிகளவு வருவார்கள். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை மற்றும் பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
நாளை வியாழன் மற்றும் நாளை மறுநாளான வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களும் முருகப்பெருமான் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இதற்காக பிரத்யேக ஏற்பாடுகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. முருகன் கோயில்கள் மட்டுமின்றி சிவபெருமான், அம்மன், பெருமாள் கோயில்களிலும் நாளை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
விரதம் இருப்பது எப்படி?
ஆடிக்கிருத்திகை நாளில் அதிகாலையிலே எழுந்து குளிக்க வேண்டும்.
அன்று காலையே பக்தர்கள் மனதார முருகனை வணங்கி தங்களது விரதத்தை தொடங்குவது நல்லது ஆகும்.
காலையில் முருகன் கோயிலுக்குச் சென்று அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுக்கலாம்.
கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலே பூஜையறையில் உள்ள சாமி படங்களுக்கு பூக்களிட்டு தீபாராதனை காட்டி வழிபடலாம்.
மாலையில் கோயிலுக்குச் சென்று சாமிதரினம் செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். வீட்டில் உள்ள பூஜையறையில் முருகப்பெருமானுக்கு வாழையிலையிட்டு வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம்வைத்து படையலிட்டும் விரதத்தை நிறைவு செய்யலாம்.
ஆடிக்கிருத்திகை நாளில் முருகப்பெருமானுக்கு உகந்த கந்தர் அலங்காரம், கந்த சஷ்டி, திருப்புகழ் ஆகியவற்றை பாடி முருகப்பெருமானை வணங்கலாம்.
பல பக்தர்கள் கிருத்திகையை முன்னிட்டு பால்குடம், காவடி எடுத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்






















