20 ஆண்டுகளுக்குப் பின் ஜெயராமுடன் நடிக்கிறேன்...“பரிமளா & கோ” பட அனுபவங்களை பகிர்ந்த ஊர்வசி
பரிமளா & கோ திரைப்படத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் ஜெயராமுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நடிகை ஊர்வசி பகிர்ந்துகொண்டார்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் “பரிமளா & கோ”. ஜெயராம் , ஊர்வசி , சந்தோஷ் சோபன் , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , சாண்டி, அனந்திகா சனில்குமார் , யோகிபாபு , மிஷ்கின், சிங்கம்புலி மற்றும் பக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். விரைவில் இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை ஊர்வசி நடிகர் ஜெயராமுடன் 20 ஆண்டுகளுக்குப் பின் இணைந்து நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.
ஜெயராமுடன் நடித்த அனுபவம் பற்றி ஊர்வசி
அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் இந்த படத்தைப் பற்றி ஏற்கனவே நிறைய விஷயங்கள் சொல்லிவிட்டார்கள். இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை இந்த படம் மிகவும் சிறப்பான ஒன்று. ஒரு நடிகராக வாழ்க்கையில் சில சமயங்களில் மட்டுமே “இந்த கதைதான் உண்மையான ஹீரோ” என்று நம்பிக்கை தரும் கதைகள் அமையும். இந்த கதையை முதலில் கேட்ட தருணத்திலேயே அந்த நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.
முழு திரைக்கதையையும் கேட்ட பிறகு, இன்னும் விரிவாக கேட்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு இந்த படத்தின் மீது எனக்கு இன்னும் அதிகமான மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அதிலும் ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஏனெனில், நாங்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து படம் செய்யவில்லை. கிட்டத்தட்ட இருபத்தைந்து படங்களுக்கு மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம். பல கதைகள் எங்களிடம் வந்திருக்கின்றன. சிலது எனக்கு பிடிக்கும், சிலது ஜெயராமுக்கு பிடிக்காது. ஆனால் இந்த கதை வந்தபோது இருவருக்கும் ஒரே நேரத்தில் பிடித்தது. காரணம், இது வெறும் சீரியஸான கதை மட்டும் இல்லை; உண்மையான வாழ்க்கை உணர்வுகளோடும், இயல்பான நகைச்சுவையோடும் சொல்லப்பட்ட கதை.
பாண்டிராஜ் உள்ளிருக்கும் எழுத்தாளருக்கு எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு. “பசங்க” படத்திலிருந்து அவர் இயக்கிய பெரும்பாலான படங்களை பார்த்திருக்கிறேன். ஒரு கதையை வடிவமைப்பதில் அவர் மிகவும் நேரம் எடுத்துக்கொள்வார். ஆனால் படப்பிடிப்பில் அவர் வேகம் வேற லெவல். மலையாள சினிமாவில் குறைந்த நாட்களில் தரமான படங்கள் எடுப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சமீபத்தில் நான் வேலை செய்த படங்களில் மிக வேகமாக முடிக்கப்பட்ட படம் இதுதான். எப்போது தொடங்கினார்கள், எப்போது முடித்தார்கள் என்று எனக்கே ஆச்சரியம். என்னால் சில நாட்களில் முழுமையாக ஒத்துழைக்க முடியாத சூழ்நிலைகளும் இருந்தன. மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் இருந்ததால் அங்கிருந்து இங்கே பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து இந்த படத்தை செய்தோம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
ஒரு நல்ல கதை, நல்ல கதாபாத்திரங்கள் அமைந்துவிட்டால் நடிகர்களாக நாமும் அதில் improvisation செய்ய ஆர்வமாக இருப்போம். அதுதான் இந்த படத்திலும் நடந்தது. நாங்கள் இதற்கு முன் பல குடும்ப படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் ஒரு காட்சியும் பழைய படங்களை நினைவூட்டும் மாதிரி இல்லை. ஒவ்வொரு காட்சியும் புதிதாகவே இருந்தது. அனந்திகா, சஞ்சனா ஆகியோருடன் பணியாற்றியது மிகவும் இயல்பான அனுபவமாக இருந்தது. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு நாங்கள் எல்லோரும் நடிகர்கள் என்ற உணர்வே மறந்து, ஒரு குடும்பமாக மாறிவிட்டோம்.
மிஷ்கின் சார் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால் இந்த படத்தில் அவர் உள்ளிருக்கும் நடிகர், அதிலும் குறிப்பாக அவரது நகைச்சுவை டைமிங் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவருக்கும் எனக்கும் சேர்ந்த சில காட்சிகள் மிக அருமையாக வந்திருக்கின்றன. இந்த படத்தின் casting மிகச் சிறப்பு. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சரியான நடிகர்களை தேர்வு செய்ததில் பாண்டிராஜ் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறார். டிரெய்லரில் ஒரு சிறிய பெண் கதாபாத்திரம் வரும். அவரை பார்த்தாலே அது தெரியும். சினிமாவின் மாயம் அப்படித்தான் — யார் எப்போது அறிமுகமாகி எவ்வளவு உயரம் செல்வார்கள் என்று சொல்ல முடியாது.
சாண்டி மாஸ்டரை “லோகா” படத்தில் பார்த்தபோதே நான் மிகவும் ரசித்தேன். என் மகள் அவருடைய பெரிய ரசிகை. இந்த படத்தில் அவருடன் சேர்ந்த காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்திருக்கின்றன. யோகி பாபுவும் இந்த படத்தில் வழக்கமான நகைச்சுவையைத் தாண்டி, உணர்ச்சிகளும் கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ் குமரன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு தயாரிப்பாளராக எந்த அழுத்தமும் எங்களுக்கு கொடுக்கவில்லை. எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக் கொண்டார். ஒரு சிறிய நடுத்தர வீட்டில் தான் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்தது. அந்த வீட்டை முழுவதும் மூடி வைத்து பகல்-இரவு காட்சிகள் எடுத்தோம். ஆக்சிஜன் குறைவாக இருந்ததால் கிட்டத்தட்ட எல்லோருக்கும் வைரல் காய்ச்சல், இருமல் வந்தது. ஆனால் கதையின் மீது இருந்த ஆர்வத்தால் அதை எல்லாம் மறந்து வேலை செய்தோம்.
அசோசியேட் டைரக்டர்கள், குறிப்பாக திவ்யா, இந்த படத்திற்காக மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். ஒரே நேரத்தில் prompting, costume, continuity என்று அனைத்தையும் கவனித்தார். ஜெகனும் தனது வேலையைத் தாண்டி, பாண்டிராஜ் மீது இருந்த அன்பால் முழுமையாக உழைத்தார்.
நானும் ஜெயராமும் பல வருடங்களுக்குப் பிறகு சேர்ந்து நடித்திருக்கிறோம். இந்த காம்பினேசனுக்கு எங்களுக்கே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். ஒரு நடிகராக நாம் நடிக்கும் ஒவ்வொரு படமும் நல்லபடியாக அமைய வேண்டும் என்று நினைத்தே வேலை செய்கிறோம். ஆனால் இந்த படம் சிறப்பாக இருப்பதற்குக் காரணம், இதில் இருக்கும் எழுத்தாளரின் உழைப்பு. எங்களால் முடிந்த அளவுக்கு அதை நேர்மையாக திரையில் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறோம். இப்போது ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உங்கள் போன்ற ஊடக நண்பர்களின் பங்கு மிகவும் முக்கியம். அதனால் உங்கள் முழு ஆதரவும் எங்களுக்கு தேவை. மிகவும் நன்றி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















