'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்தின் வெளியீட்டுக்கு முன் ஏற்பட்ட நிதி நெருக்கடி, கடன், ஜோதிகாவின் ஆதரவு குறித்து சூர்யா பகிர்ந்த தகவல்கள்.

'கருப்பு' திரைப்படம் வெளியாவதற்கு முன் ஏற்பட்ட நிதி நெருக்கடி, கடைசி நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் மற்றும் அந்தக் காலகட்டத்தில் ஜோதிகா அளித்த ஆதரவு குறித்து நடிகர் சூர்யா மனம் திறந்து பேசியுள்ளார்.
"கடைசி நேரத்தில் பெரிய நிதிச்சுமை வந்தது"
படம் வெளியாகும் முன்பு எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கூறிய அவர், "கடைசி நேரத்தில் என்மீது மிகப்பெரிய நிதிச்சுமை வந்தது. அதனால் கூடுதலாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த முடிவை எடுப்பது எனக்கு மிகவும் பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் ஜோதிகா என்னை முழுமையாக நம்பினார். அந்தக் கடன்களை வாங்குவதற்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் என்னை அனுமதித்தார். ஏதாவது தவறு நடந்தாலும், அதை ஒரு குடும்பமாக சேர்ந்து எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கையோடு என்னுடன் நின்றார்" என்றார்.
"அந்த நம்பிக்கையே அந்த முடிவை எடுக்க வைத்தது"
திரையுலகில் பல ஆண்டுகள் இருந்தாலும், சில சூழ்நிலைகள் அனுபவத்தால் மட்டும் சமாளிக்க முடியாதவை என்றும் அவர் கூறினார். "எத்தனை ஆண்டுகள் இந்தத் துறையில் இருந்தாலும், சில நேரங்களில் நம் கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலைகள் உருவாகும். அப்போது நம்பிக்கையுடன் ஒரு அடியை எடுத்து வைக்க வேண்டும். இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும், இந்தப் பிரச்சினையை கடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கையே அந்த முடிவை எடுக்க வைத்தது. அந்த நம்பிக்கையும், உள்ளுணர்வும்தான் எங்களை இந்தக் கட்டத்தைத் தாண்டி அழைத்துச் சென்றது" என்று தெரிவித்தார்.
"இந்த மாதிரியான சூழ்நிலைகளில் மறைமுகமாக பாதிக்கப்படுவது குடும்பம்தான். அதனால் நான் எப்போதும் அவருடன் இருப்பேன். எதுவாக இருந்தாலும் நாங்கள் ஒன்றாகவே எதிர்கொள்வோம்" என்று கூறினார்.
"அனைவரின் ஒத்துழைப்பால்தான் படம் வெளியானது"
படம் வெளியானதற்கு தன்னுடைய முயற்சி மட்டும் காரணமல்ல என்றும் சூர்யா குறிப்பிட்டார். "இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் படத்திற்காக உழைத்திருந்தார். அவருடைய உழைப்பு வீணாகக் கூடாது என்பதுதான் என் எண்ணம். அதேபோல் நிதியளித்தவர்களும், திரையரங்க உரிமையாளர்களும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். பொறுமையாக காத்திருந்தார்கள். அனைவரும் சேர்ந்து எடுத்த முயற்சியால்தான் இந்தப் படம் வெளியானது" என்று தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















