"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
குழந்தைகள் வளர்ப்பு, குடும்ப முடிவுகள், பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது குறித்து சூர்யா–ஜோதிகா மனம் திறந்த பேட்டி.

திருமண வாழ்க்கையில் புரிதலும், விட்டுக்கொடுத்தலும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு குழந்தைகளை வளர்ப்பதிலும் பெற்றோர் ஒரே எண்ணத்தில் இருக்க வேண்டும் என்று சூர்யா மற்றும் ஜோதிகா தெரிவித்துள்ளனர். குடும்பத்தில் எந்த முடிவாக இருந்தாலும் அது இருவரும் இணைந்து எடுத்த முடிவாகவே இருக்கும் என்றும், குழந்தைகளுக்கு ஒருபோதும் குழப்பம் ஏற்படாத சூழலை உருவாக்கியிருப்பதாகவும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
"குழந்தைகள் எங்களைப் பிரித்துப் பார்க்க முடியாது"
குழந்தைகளை வளர்ப்பதில் இருவரும் ஒரே கருத்தில்தான் இருப்போம் என்று ஜோதிகா கூறினார். "பெற்றோர்களாக இருந்தாலும் நாங்கள் எப்போதும் ஒரே பக்கத்தில்தான் இருப்போம். முதலில் நாங்கள் இருவரும் பேசிக்கொள்வோம். அதன் பிறகுதான் குழந்தைகளிடம் சொல்வோம். 'அம்மாவிடம் ஒன்று சொன்னால் சம்மதித்துவிடுவார், அப்பாவிடம் வேறு மாதிரி சொல்லலாம்' என்று குழந்தைகள் நினைக்க முடியாத அளவுக்கு, நாங்கள் எப்போதும் ஒரே முடிவில்தான் இருப்போம்" என்றார்.
"வீட்டு வேலை முதல் குழந்தைகள் வரை... எல்லாமே இருவருடைய பொறுப்பு"
குடும்ப வாழ்க்கையில் பொறுப்புகளை தனித்தனியாக பிரித்ததில்லை என்றும் ஜோதிகா கூறினார். "சமையல் செய்வதாக இருந்தாலும், குழந்தைகள் தொடர்பான விஷயங்களாக இருந்தாலும், குடும்பமாக வெளியே செல்வது, விடுமுறையைத் திட்டமிடுவது, காலண்டரில் முக்கியமான நாட்களைக் குறித்துக் கொள்வது என எல்லாவற்றையும் நாங்கள் இருவரும் சேர்ந்துதான் செய்கிறோம். ஒருவருடைய வேலை, இன்னொருவருடைய வேலை என்று நாங்கள் நினைத்ததில்லை" என்று தெரிவித்தார்.
"வீட்டில் சினிமா பற்றி அதிகம் பேசுவதில்லை"
சினிமா குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் என்பதற்காக அவர்கள்மீது எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்று இருவரும் தெரிவித்தனர். "வீட்டில் குழந்தைகளுடன் நாங்கள் சினிமா பற்றி அதிகம் பேசுவதில்லை. உண்மையில் அவர்களுக்கே அதில் பெரிய ஆர்வம் இல்லை. யாராவது புகைப்படம் எடுக்க வந்தால்கூட அவர்கள் சங்கடப்படுவார்கள். அந்த வகையில் அவர்கள் எங்களுடைய வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியிருக்கிறார்கள்" என்று கூறினர்.
"சென்னையில் கிடைத்த வளர்ப்புதான் மிகப்பெரிய அடித்தளம்"
தங்களுடைய குழந்தைகள் மிகவும் எளிமையாக இருப்பதற்கு அவர்கள் வளர்ந்த சூழலே காரணம் என்று ஜோதிகா கூறினார். "சூர்யாவின் குடும்பம் மிகவும் பாரம்பரியமான குடும்பம். சேவை மனப்பான்மையுடன் வாழும் குடும்பத்தில் குழந்தைகள் வளர்ந்தார்கள். சென்னையின் எளிமையான வாழ்க்கை முறையும் அவர்களுக்கு நல்ல அடித்தளமாக அமைந்தது. அதன்பிறகு மும்பைக்கு வந்தபோதும் அந்த எளிமையை அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை. நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அதனால் பெற்றோர்களாக எங்களுடைய வேலை மிகவும் எளிதாகிவிட்டது" என்றார்.
"மகளின் முதல் கேள்வி... எப்படி சம்பாதிப்பது?"
தங்களுடைய மகள் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் பொறுப்புடன் சிந்திப்பதாக சூர்யா பகிர்ந்துகொண்டார். "நான் எப்படி பணம் சம்பாதிப்பேன்? எப்படி பொருளாதார ரீதியாக சுயமாக நிற்பேன்? நீங்கள் முதலில் எப்படி சம்பாதிக்க ஆரம்பித்தீர்கள்? என்று அவள் தொடர்ந்து கேட்கிறாள். இன்னும் தன்னுடைய பாதையைத் தேடிக்கொண்டிருக்கிறாள். சரியான நேரத்தில் எல்லாமே ஒன்றாக இணைந்துவிடும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















