CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
தமிழக அமைச்சரவையில் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கும் அமைச்சர்களின் பதவியை பறிக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தாங்கள் சந்தித்த முதல் தேர்தலிலே விஜய் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சியையும் வீழ்த்தி முதல் தேர்தலிலே ஆட்சியை அமைத்துள்ள விஜய் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
கல்லா கட்டும் அமைச்சர்கள், நிர்வாகிகள்:
செங்கோட்டையன் தவிர முதலமைச்சர் விஜய் உள்பட அமைச்சர்கள் அனைவரும் தவெக ஆட்சியில் புதியவர்கள். ஊழலற்ற ஆட்சியைத் தருவேன் என்ற அறைகூவலுடன் ஆட்சியைப் பிடித்துள்ள விஜய்க்கு அவரது கட்சியின் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பலரும் சவாலாக இருந்து வருகின்றனர்.
தனது தனிப்பட்ட செல்வாக்கு மூலமாக எம்எல்ஏ-க்களாக வெற்றி பெற வைத்து அமைச்சர் பதவி வழங்கிய பலரும் வசூல் வேட்டை நடத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருவது விஜய்க்கு வேதனையை உண்டாக்கியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது அமைச்சர்களின் செயல்பாட்டை உளவுத்துறை மூலமாக கண்காணித்து வருகிறார்.
முதலமைச்சர் எச்சரிக்கை:
தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் ஏதும் ஆட்சி நிர்வாகத்தில் கண்டுகொள்ளப்படாது என்று மிகவும் கடினமாக அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் ஏற்கனவே எச்சரித்துள்ளார். இருப்பினும் சில அமைச்சர்கள் மீது தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த சூழலில், விஜய் சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பறிபோகபோகும் அமைச்சர் பதவி:
தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பல அமைச்சர்களின் பதவிகள் பறிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை 8 அமைச்சர்கள் அந்த பட்டியலில் உள்ள நிலையில், செப்டம்பர் மாதம் அதில் சிலரது பதவி அதிகாரப்பூர்வமாக பறிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர்களுக்கு பதிலாக விருதுநகர் செல்வம், வேலூர் வினோத் கண்ணன், திருப்பத்தூர் சீனிவாச சேதுபதி, பவானிசாகர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலரது பெயர்கள் அமைச்சர் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வார்னிங்:
விஜய் இந்த நடவடிக்கை மூலமாக அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் நேரடி எச்சரிக்கையை விடுக்க திட்டமிட்டுள்ளார். மேலும், சில அமைச்சர்களின் இலாக்காக்களையும் மாற்ற அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக என்ற மாபெரும் இரு பெரிய எதிர்க்கட்சிகளை எதிர்த்து ஆட்சி செய்து வரும் விஜய்க்கு கூட்டணி கட்சியினரே பல தருணங்களில் சவாலாக உள்ளனர்.
இந்த நெருக்கடியான சூழலில், சவாலான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும் வசூல் வேட்டை நடத்துவதாக வெளியாகி வரும் தகவலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்காக விஜய் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அச்சத்தில் அதிகாரிகள்:
மேலும், காவல்துறை அதிகாரி புகாரி கைது செய்யப்பட்டிருப்பதும் அதிகாரிகளுக்கு மத்தியில் பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. புகார், முறைகேடுகளுக்கு சிக்கியிருக்கும் அதிகாரிகள் பலரும் தங்கள் மீது எப்போது நடவடிக்கை பாயும்? என்ற அச்சத்தில் உள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















