![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Avadi Double Murder Case: அதிரவைக்கும் ஆவடி இரட்டைக் கொலை.. செல்போனை கைப்பற்றி போலீஸார் தீவிர விசாரணை!
ஆவடி அடுத்த மிட்டனமல்லி பகுதியில் நேற்று சித்த மருத்துவர் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னகுமாரி கொலை வழக்கு தொடர்பாக செல்போன் சிக்கியுள்ளது.
![Avadi Double Murder Case: அதிரவைக்கும் ஆவடி இரட்டைக் கொலை.. செல்போனை கைப்பற்றி போலீஸார் தீவிர விசாரணை! Avadi double murder case: Police seized cell phone from the place of murder Avadi Double Murder Case: அதிரவைக்கும் ஆவடி இரட்டைக் கொலை.. செல்போனை கைப்பற்றி போலீஸார் தீவிர விசாரணை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/29/b36c576c71de5b4f6e49f256918f32c01714363192400571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆவடியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகை பணம் கொள்ளையடிக்க கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்ன நடந்தது..?
ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் சித்தா மருத்துவரான சிவன் நாயர். இவர் வீட்டிலேயே அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களது மகன் இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருவதாகவும், இவரது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல நேற்று வீட்டில் சிகிச்சைப் பார்த்து வந்துள்ளார். சிகிச்சை பார்ப்பதுபோல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுபேட்டை காவல்துறையினர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான பல்வேறு அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் மாலை நேரத்தில் வெகு இயல்பாக வந்து கணவன் மனைவி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள சூழலில் ஆவடி காவல் ஆணையரக துணை ஆணையர் அய்மன் ஜமால் தலைமையில் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா என்றும் ,குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான முப்படைகள் மட்டும் இன்றி படை உடை பீரங்கி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்கள் செயல்படக்கூடிய பகுதியில் கடந்த வாரம் ஒன்றரை கோடி மதிப்புள்ள நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட பரபரப்பு குறைவதற்குள் கணவன் மனைவி வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போதிய சிசிடிவி கண்காணிப்பு இல்லை, முறையாக ரோந்து பணியில் போலீசார் ஈடுபடவில்லை என அப்பகுதி வாசிகள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர்:
இந்த இரட்டை கொலை சம்மந்தமாக விசாரணையில் கொலை நடைபெற்ற இடத்தில் செல்போன் கைப்பற்றப்பட்டது. அதன் அடிப்படையில் மகேஷ் என்ற வட மாநில நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மருத்துவம் பார்க்க வந்து சென்றவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது. நகை மற்றும் பணத்திற்காக கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)