Trump Vs Mojtaba Khamenei: ட்ரம்ப்பே, அத சொல்ல நீங்க யாரு.?; ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா பத்தி இப்படி சொல்லிட்டாரே.!
மறைந்த ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனியின் 56 வயதான மகன் மொஜ்தபா கமேனி, தனது தந்தைக்குப் பிறகு இஸ்லாமிய குடியரசின் புதிய தலைவராக பொறுப்பேற்பது "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா கமேனி அந்நாட்டின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடமிருந்து கடுமையான எதிர்வினையைப் பெற்றுள்ளது. இந்த நியமனம் குறித்து அவர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். ஈரானின் உயர் தலைமைப் பதவியை மொஜ்தபா கமெனி ஏற்றுக்கொள்வதை தான் ஏற்கவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
'கமேனியின் மகன் முட்டாள்'
ஈரானின் புதிய தலைமை குறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நாட்டிற்கு "நல்லிணக்கத்தையும் அமைதியையும்" கொண்டு வரும் ஒரு தலைமையை அமெரிக்கா ஈரானில் விரும்புகிறது என்றார். உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், "அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள், கமேனியின் மகன் ஒரு முட்டாள்" என்று விமர்சித்துள்ளார்.
மேலும், கமேனியின் கொள்கைகளைத் தொடரும் ஒருவரை தலைவராக்குவது, அமெரிக்காவை "5 ஆண்டுகளில்" மீண்டும் போரில் ஈடுபட நிர்பந்திக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
வெனிசுலாவைப் போன்ற ஆட்சி மாற்றம் குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவைப் போலவே ஈரானிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அமெரிக்க அதிபர் எழுப்பியுள்ளார். ஈரானின் உச்ச தலைவரின் நியமனத்தில் தானே நேரடியாக ஈடுபட வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். "வெனிசுலாவில் டெல்சி நியமனத்தில் நான் ஈடுபட்டது போல், ஈரானிலும் உச்ச தலைவரின் நியமனத்தில் நான் ஈடுபட வேண்டியிருக்கும்." என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை மூலம், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் கைது செய்யப்பட்டு, அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நடவடிக்கையை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார். ட்ரம்பின் கூற்றுப்படி, அமெரிக்க ராணுவம் இந்த நடவடிக்கையை வெறும் 30 நிமிடங்களில் மேற்கொண்டது. அதன் பிறகு துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலாவின் அதிபராகப் பொறுப்பேற்றார்.
நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும் என்று ட்ரம்ப் அழைப்பு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்தும் ட்ரம்ப் ஒரு குறிப்பிடத்தக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகளில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் மன்னிப்பு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
"போரைத் தவிர வேறு எதையும் நெதன்யாகு மனதில் வைத்திருப்பதை நான் விரும்பவில்லை" என்று ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக, லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் ஆகிய மூன்று தனித்தனி வழக்குகளில் நெதன்யாகு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். இருப்பினும், அவர் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















