சித்தராமையாவுக்கு ENDCARD! முதல்வராகும் DK சிவக்குமார்? சித்தராமையா மகன் பகீர்
கர்நாடக முதலமைச்சர் பதவியில் மாற்றம் வரப்போவதாக தகவல்கள் பரவி வரும் நேரத்தில், சித்தராமையா தனது அரசியல் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார் என சொல்லி பரபரப்பை கிளப்பியுள்ளார் அவரது மகன். காங்கிரஸ் மேலிடம் போட்ட டீலின் படி பவர் டி.கே.சிவக்குமார் கைகளுக்கு செல்கிறதா என்ற கேள்வி வருகிறது.
கர்நாடகாவில் 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால் அன்றைய நாளில் இருந்தே சித்தராமையாவுக்கும் டி.கே.சிவக்குமாருக்கும் ஒடையே அதிகார போட்டி ஆரம்பமானது. சீனியர் என்ற அடிப்படையில் சித்தராமையாவிடன் முதலமைச்சர் பதவியை ஒப்படைத்த காங்கிரஸ் தலைமை, டி.கே.சிவக்குமாருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்தது. அப்போது 2 பேரும் ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து கொள்ளலாம் என டீல் போட்டு தான் தலைமை இந்த விஷயத்தை சரிகட்டியதாக பேச்சு அடிபட்டது.
ஆனால் டி.கே.சிவக்குமாரும் அவரும் ஆதரவாளர்களும் ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தியில் தான் இருக்கின்றனர். டி.கே.சிவக்குமார் கைகளுக்கு முதலமைச்சர் பதவி வர வேண்டும் என அவரது ஆதரவாளர்களே பொதுவெளியில் பேசி வந்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. சித்தராமையா மனைவிக்கு 14 மனைகள் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்த நேரத்தில், அதனை காரணமாக வைத்து சித்தராமையாவை பதவியில் இருந்து இறக்கும் வேலைகளும் நடந்து வந்தது. அதுவும் தோல்வியில் முடிந்ததால் டி.கே.சிவக்குமார் தரப்பு அப்செட் ஆனது.
இந்தநிலையில் கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றம் பற்றிய பேச்சு மீண்டும் சூடுபிடித்துள்ளது. நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டு ஆட்சியை நிறைவு செய்கிறது காங்கிரஸ். அதனால் டீலிங்கின் படி அடுத்த முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் என்ற பேச்சு ஆரம்பமாகியுள்ளது. டி.கே.சிவகுமாருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்திருந்தார்.
ஆனால் 5 ஆண்டுகள் நான் தான் முதலமைச்சராக இருப்பேன் என பதிலடி கொடுத்தார் சித்தராமையா.
இந்தநிலையில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, தனது தந்தை சித்தராமையா அரசியல் வாழ்க்கையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளார் என சொல்லி பரபரப்பை கிளப்பியுள்ளார். அப்படியென்றால் டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆவது உண்மை தானா என விவாதம் எழுந்தது. உடனே தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் கொடுத்தார் யதீந்திரா. சித்தராமையா 2028க்குப் பிறகு தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கூறியதால், அவருக்குப் பிறகு, சமூக நீதி, மதச்சார்பற்ற சித்தாந்தம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவர் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த முடியும் என்று மட்டுமே நான் கூறினேன். முதலமைச்சர் பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார்.
இருந்தாலும் முதலமைச்சர் இருக்கையில் அமர்வதற்கு டி.கே.சிவக்குமார் டெல்லி தலைமையை நெருக்க ஆரம்பித்துள்ளதாக சொல்கின்றனர். இரண்டரை ஆண்டுகளாகவே இதுபற்றிய பேச்சு போய்க் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற கேள்வி வந்துள்ளது. டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்களும் கோபத்தில் இருப்பதால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திலும் காங்கிரஸ் இருக்கிறது.





















