கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் பேசிய கருத்து - அமைச்சர் சேகர்பாபு ரியாக்ஷன் என்ன?
கரூர் சம்பவத்திற்கு அனைவருக்கும் பொறுப்புள்ளது என நடிகர் அஜித்குமார் பேசியது குறித்தான கேள்விக்கு , நடிகர் அஜித்குமாரின் பேட்டியை நான் இன்னும் பார்க்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு பதில்

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி துவக்க விழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு தகவல் பெட்டியின் சேவையை தொடங்கி வைத்தார். உடன் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2025- 2026 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி, திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அருகாமையில் உள்ள திருக்கோயில்களை அறிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டிகள் அமைக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. அதில் முதற்கட்டமாக 10 திருக்கோயில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி அமைக்கப்பட்டுள்ள கோயில்களின் விவரங்கள் ;
1. பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில்
2. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
3. திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்
4. மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்
5. காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில்
6. சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில்
7. பேரூர் அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில்
8. திருவண்ணாமலை திருக்கோயில் அருள்மிகு அருணாச்சலேசுவரர்
9. சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோயில்
10. புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
உள்ளிட்ட 10 கோயில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியில் இருக்கும் அம்சங்கள் ;
1. அருகே உள்ள திருக்கோவில்கள்
2. திருக்கோயில் வரலாறு
3. திருக்கோவில் திருமண மண்டபம்
4. திருக்கோவில் தகவல்
5. சுற்றுலா தலங்கள்
6. புராதான சின்னங்கள்
7. நூலகம்
8. அரசு அருங்காட்சியகம்
9. பூங்காக்கள்
உள்ளிட்ட அம்சங்கள் இந்த தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது ;
பக்தர்கள் நலனுக்காக வளர்ந்து வரும் விஞ்ஞானத்திற்கு ஏற்ப புதிய திட்டங்கள் இந்த துறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. திருக்கோயில் பல்வேறு பதிவேடுகள் சுமார் 4 கோடி பக்கங்கள் ஸ்கேன் செய்து கணிணிமயத்தில் கொண்டு வந்துள்ளோம்.திருக்கோயில்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு ஊழியர்கள் செயல்பாடுகள் மற்றும் பக்தர்கள் அத்து மீறலில் ஈடுப்பட்டால் அதனை கண்காணித்து வருகிறோம்.விக்கிரங்கள் பாதுகாப்பிற்காக 1800 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து பிரதான கோயில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. கோயில் நிலங்கள் அனைத்தும் அளவீடு செய்யப்பட்டு உள்ளது. 2 லட்சத்து 19 ஆயிரத்து 381.19 ஏக்கர் அளவீடு செய்யப்பட்டுள்ளது. 1 லட்சம் எல்லை கற்கள் நிறுவப்பட்டு உள்ளது. வாடகை செலுத்துவது உள்ளிட்ட திருக்கோயில் வருமானங்கள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களும் கணிணி மயமாக்கப்பட்டு உள்ளது.
கோயில் மடங்களின் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் என்ன தயக்கம் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது குறித்தான கேள்விக்கு ;
நீதிமன்றம் என்ன வழிகாட்டு நெறிமுறைகளை கூறுகிறதோ அதை பின்பற்ற துறை தயாராக இருக்கிறது எனவும் ஒளிவு மறைவு எதுவும் இல்லை, துறையை பொறுத்த வரை திறந்த புத்தகமாக செயல்படுகிறோம்.
தமிழகத்தில் பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு குறித்தான கேள்விக்கு ;
பிரித்து ஆளும் தந்திரத்தை கையில் எடுத்து, இனத்தால், மொழியால், மக்களை பிளவுப்படுத்துகின்ற அரசு உலகத்தில் இருக்கிறது என்றால் அதில் முதல் பரிசு ஒன்றிய அரசுக்கு தரலாம். இந்த மண் திராவிட மண் எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற தத்துவத்தின்படி ஆட்சி செய்கின்ற முதலமைச்சர் ஆளுகின்ற மண்ணில் எடுபடாது எனவும் வட இந்தியர்களை நாங்கள் சகோதரத்தோடு நடத்துகிறோம். வட இந்தியர்களை வேற்று கண்ணோடு பார்க்கவில்லை அவர்களும் மனிதர்கள் அவர்களும் எங்களைச் சார்ந்தவர்கள் எங்கள் வாழ்க்கை நடைமுறையோடு ஒட்டி பிணைந்து இருக்கிறார்கள் அதனால் அதில் பிளவுப்படுத்தி திமுக எதிர்ப்பு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்க கூடிய பாஜகவும் பிரதமர் மோடியின் முயற்சியும் தமிழகத்தில் எடுபடாது.திமுக சார்பாக தான் நான் இந்த பதிலை சொல்கிறேன். மக்களால் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இந்த கருத்தை சொல்கிறேன். திமுக மாவட்ட செயலாளராக உள்ள என்னுடைய கருத்து கட்சியை ஒட்டிய கருத்தாக தான் இருக்கும்.
அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்தான கேள்விக்கு ;
அதனை எடப்பாடி பழனிசாமியிடம் போய் கேளுங்கள் இல்லை, செங்கோட்டையனிடம் கேளுங்கள். இன்று செங்கோட்டையன் பதிலை சொல்வார் எனக் கூறியிருக்கிறார். எடப்பாடி அதிதீவிரமான அற்புதமான, ராஜதந்திரமான , நடவடிக்கைகளால் கொஞ்சம் கொஞ்சமாக கரையான் வந்து புற்று அரித்து கொண்டு இருப்பது போல இன்றைக்கு அதிமுகவை அவர் அரிந்து கொண்டு பாஜகவை வலுவாக்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.
அதை உண்மையான அதிமுக தொண்டர்கள் உணர்ந்து இருக்கிறார்கள் எனவும் முதல்வர் கரத்தை மேலும் பலம் பொருத்தவும் களத்தை மேலும் பல மடங்கு பலப்படுத்தவும் அனைவரும் வருவார்கள்.
கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பு அல்ல , அனைவருக்கும் அதில் பொறுப்பு இருக்கிறது என நடிகர் அஜித்குமார் பேசியது குறித்தான கேள்விக்கு ;
அந்த பேட்டியை நான் பார்க்கவில்லை என பதில் அளித்தார்.





















