Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் உலகின் மிக முக்கிய கடல்வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்று சேர்ந்து பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வாருகின்றன. இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி உட்பட பள்ளி மாணவிகள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா, துபாய், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளையில், ஈரானைத் தாக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் அமெரிக்காவுடன் கைகோர்த்திருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், ஈரான் மீதான தாக்குதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும் என்று ட்ரம்ப் கூறியிருப்பதால், இது மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் என்ற அச்சத்தையும் உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் மிக முக்கிய கடல்வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படை இதுகுறித்த தனது அறிவிப்பில், ``எந்தக் கப்பலாவது இதன் வழியே செல்ல முயற்சித்தால் தீக்கிரையாக்குவோம்" என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஹோர்முஸ் நீரிணைக்கு வடக்கே ஈரானும், தெற்கே குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா, துபாய், கத்தார் ஆகிய நாடுகளும் இருக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டிதான் இந்த நாடுகளுக்கு கப்பல் வரவும் முடியும், இந்த நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் வெளியறவும் முடியும்.
ஹோர்முஸ் நீரிணையின் அகலம் சுமார் 33 மைல். ஆனால், இதில் இரு திசையிலும் 2 மைல் அளவுக்கு மட்டும்தான் கப்பல் வழித்தடம் இருக்கிறது.
இருப்பினும், உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது 20 சதவிகித கச்சா எண்ணெய் இதன் வழியாகத்தான் ஏற்றுமதி செய்யப்டுகிறது.
தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் இந்த வழித்தடம் வழியாகத்தான் உலக நாடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அதிகளவிலான கச்சா எண்ணெய் ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்றுமதியாகிறது.
மேலும், உலகின் ஒட்டுமொத்த எல்.என்.ஜி எரிவாயு ஏற்றுமதியில் 30 சதவிகித ஏற்றுமதி இந்த வழியாகத்தான் வர்த்தகமாகிறது.
குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகளின் எல்.என்.ஜி எரிவாயு இந்த வழியாகத்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மட்டுமின்றி, உணவுப் பொருள்கள், விவசாயப் பொருள்கள், கெமிக்கல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என பல்வேறு சரக்குகளும் இந்த வழியாகத்தான் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.
இவ்வாறு உலக வர்த்தகத்தையே தன்னைச் சுற்றி வைத்திருக்கிறது ஹோர்முஸ் நீரிணை.
ஒருவேளை ஈரானின் எச்சரிக்கையின்படி ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டும்.
இதனால் கால தாமதம் ஏற்படுவது மட்டுமல்லாமல், கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் கடுமையாக உயரக்கூடும்.
சர்வதேச நிலவரப்படி தற்போது 70 முதல் 80 டாலருக்கு வர்த்தகமாகும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலர் வரை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவிலும் எரிபொருள் விலையில் அது எதிரொலிக்கும். இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள்.
இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளும், குறிப்பாக கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பிரதான பொருளாதாரமாகக் கொண்ட வளைகுடா நாடுகளும் காடும் பாதிப்புக்குள்ளாகும்.
எனவே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு சளைக்காமல் ஈரானும் பாதிலடி கொடுத்து வருவதால், இந்தப் போரை பேச்சுவார்தை மூலம் சுமூகமாக முடிவுக்கு கொண்டு வருவதுதான் உலக வர்த்தகம் பதிக்குள்ளாவதிலிருந்து தடுக்கும்.























